ஞாயிறு, ஜனவரி 03, 2016

ஜோதிடம் மெய்யா? பொய்யா?

ஆக்கம்: O.M. பெருமாள்,B.Pharm.,P.G.D.C.A.,D.V.P.,
D.A. (Astrology).,
M.A (Astrology)., MICAS
( P.S.ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மைய உறுப்பினர் )
U.S.A
இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்புகொள்ளும் அளவில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன . சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே வானில் உள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் முன்னோர்கள் நிருபர்களாக இருந்திருக்கின்றனர் .
அந்தக் காலத்தில் வான சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரமும் ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்திருக்கின்றன . மத குருமார்களோ வானியல் வல்லுனர்களாக , ஜோதிட விற்பன்னர்களாக அரசுக்கு ஆலோசர்களாகக் கோலோச்சி இருந்தார்கள் . அவர்களின் கணிப்புன் அப்படியே பலித்தது .
கலிலியோவும் ,நியூட்டனும் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே கன்னடா , பாஸ்கரா , ஆரியப்பட்டா போன்ற வான சாஸ்திர நிபுணர்கள் இந்தியாவில் தோன்றி வானியல் குறித்து பல அற்புத உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர் .

பைபிளிலும் பண்டைய எகிப்திய சீன நூல்களிலும் , நமது மகாபாரதம் , ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் வருங்கால நிகழ்வுகளை கணித்ததாக பல குறிப்புகள் உள்ளன .
மாவீரன் அலெக்ஸ்சான்டரின் அரண்மனையில் இந்திய ஜோதிட நிபுணர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் அலெக்ஸ்சான்டரின் ஜாதகத்தை கணித்து பாபிலோன் நகரில் நீங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்து இருக்கிறார்கள் . இதனால் பல ஆண்டுகள் பாபிலோன் நகருக்கு அலெக்ஸ்சாண்டார் போவதை தவிர்த்து வந்தார் . இறுதியாக வேறு வழியின்றி பாபிலோன் நகருக்கு சென்ற போது , இந்திய ஜோதிடர்கள் கணித்த படி , எதிரிகளால் உணவில் , விஷம் வைத்து கொல்லப்பட்டார் . ஜோதிடம் பலித்தது .
இயேசு கிறிஸ்து பிறந்த போது , ஏரோது மன்னனின் அரண்மனையில் இருந்த ஜோதிட நிபுணர்கள் யூத குலத்தில் ஒரு குழந்தை பிறப்பதாகவும் , அந்த குழந்தை யூத மக்களின் தலைவனாக மாறுவான் , ஏரோது மன்னனின் பரம்பரை ஆட்சி அழிந்து விடும் என எச்சரித்தனர் .
இதனால் கலக்க மடைந்த ஏரோது மன்னன் தனது நாட்டிலுள்ள ஒரு வயதிற்கு உட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விட உத்தரவிட்டான் . ஆனால் இயேசு தப்பித்தார் . யூதர்களை காக்கும் கடவுளாகவே மதிக்கப்பட்டார் . ஜோதிடம் பலித்தது .
கம்சன் கதையும் கிட்டத்தட்ட இதுவேதான் . தனது தங்கைக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்லியதால் , தங்கையையும் அவளது கணவனையும் சிறையில் அடைத்து பிறந்த குழந்தைகளைக் கொன்றான் . ஆனாலும் கிருஷ்ணன் தப்பிக்கக் கடைசியில் கம்சனை வதம் செய்தார் . ஜோதிடம் பலித்தது .
ஜூலியஸ் சீசரின் அரண்மனையில் ஸ்பூரினா என்ற புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் இருந்தார் . தனது நண்பர்களாலேயே ஜூலியஸ் சீசர் கொல்லப்படுவார் என சீசரை முன் கூட்டியே எச்சரித்திரிந்தார் . அப்படியே நடந்தது . ஜோதிடம் பலித்தது .

நெப்போலியன் காலத்தில் லினோர் மாண்ட் என்ற பெண் ஜோதிட நிபுணர் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் . மாஸ்கோ மீது படையெடுத்துச் சென்றால் தோல்வி நிச்சயம் என இவர் நெப்போலியனை எச்சரித்தார் . ஆனால் அதை நெப்போலியன் பொருட்படுத்தாமல் ரஷ்யா மீது படை நடத்திச் சென்று தோல்வியைத் தழுவினார் . ஜோதிடம் பலித்தது .
இவ்வாறு பண்டைகாலம் தொட்டே வரலாற்றின் பக்கங்களில் ஜோதிடக் கலைக்கு பல ஆதாரங்கள் உள்ளன .
குழந்தைகள் பிறந்த மாதம் , நேரம் அடிப்படையில் ஜாதகம் கணிக்கும் வழக்கும் ஏற்பட்டு , புதிய பாபிலோனின் காலம் கி . மு . 600 முதல் 300 வரை உள்ள காலக் கட்டத்தில் கணிக்கப்பட்ட 16 ஜாதகங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .
இப்படி உயர்ந்த கலையாக , விஞ்ஞானமாகக் போற்றப்பட்ட ஜோதிடம் இன்று வெறும் ஏமாற்று வேலை , உண்மையில்லை என்று இதன் வரலாறு , சூட்சமங்கள் அறியாமையில் பிதற்றுகிறார்கள் .
ஜோதிடக் கலையை இவர்கள் மறுப்பதற்கு அடிப்படை காரணம் ஒன்று தான் . கிரகங்கள் , சூரிய , சந்திரர்கள் , மனிதர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை உண்மை என்று ஒத்துக்கொண்டாலும் , இந்த தாக்கங்கள் பூமியில் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி ஜாதகம் , குணநலன் தானே அமையும் . எப்படி மாறுதல் , வித்தியாசம் ஏற்படும் என்பது தான் . இதனால் ஜோதிடம் உண்மையில்லை என்று கூறுகிறார்கள் .
நாம் அவர்களுக்கு வைக்கப்படும் கேள்விகள் சில :
* ஒரு மனிதனின் செயல்பாடும் , உருவ அமைப்பும் , எண்ணங்களும் , மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் , ஒரே பெற்றோருக்கு பிறந்த அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியாக இல்லையே ? உருவ அமைப்பிலும் , செயல்பாடுகளிலும் , எண்ணங்களிலும் , ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளதே ஏன் ?
* ஒரே நேரத்தில் பத்துப்பேர் சேர்ந்து ஒரே வகை உணவை உண்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . அதில் ஒருவருக்கு மட்டும் ஏன் வாந்தி , பேதி போன்றவை ஏற்படுகிறது . இது உணவில் உள்ள கிருமிகளால் ஏற்பட்டிருக்கும் என பதில் கூறுவார்களானால் மற்ற ஒன்பது பேரும் அதே உணவை தானே உட்கொண்டார்கள் ? அவர்களை ஏன் அந்த நோய்க்கிருமிகள் தாக்கவில்லை ?
*ஒரு வகுப்பில் இருக்கும் 40 மாணவர்களுக்கும் பொதுவாகத்தான் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . ஆனால் ஒரு மாணவன் 100 மார்க்கும் , வேறு ஒருவன் ' 0 ' மார்க்கும் வாங்குகிறான் . ஏன் இந்த வேறுபாடு ?
இது போன்று ஆயிரம் கேள்விகளை நாம் அவர்களிடம் கேட்கலாம் . அவர்களும் பல பதில்கள் கூறுவார்கள் . இந்த கேள்வி பதில் அனைத்தையும் அலசிப் பார்த்தால் அடிப்படைக் கருத்து ஒன்று இருப்பதை உணர முடியும் .
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை , ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லை . ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய தனித்தன்மைகள் உள்ளன .
ஒரு மனிதனின் கைரேகையைப்போல் இன்னொரு மனிதனின் கைரேகை இருப்பதில்லை . இதன் அடிப்படையிலேயே குற்றங்களைக் கண்டுபிடிக்க தடைய இயல் வல்லுனர்கள் கை ரேகையில் துணையை நாடுகின்றனர் . இது ஏன் ?
மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் , தாவரங்களுக்கும் கூட இது பொருந்தும் , ஒரே வகை மரத்தில் கூட ஒவ்வொரு மரமும் , ஒவ்வொரு வகை கிளைகள் , இலைகள் வளரும் , இது ஏன் ?
வண்ணத்துப் பூச்சிகளில் பல வகைகள் உண்டு . ஆனால் ஒரே வகை வண்ணத்துப்பூச்சியில் கூட வெவ்வேறு வகை, வண்ணக் கலவைகளுடன் காணப்படுகிறது . ஒரு வண்ணத்துப் பூச்சியை போல் மற்றொரு வண்ணத்துப் பூச்சி இருப்பதில்லை . இது ஏன் ?
இயற்கையின் படைப்பில் எந்த ஒரு பொருளும் அச்சு அசலாக ஒன்று போல் இருப்பதில்லை . ஒவ்வொன்றும் அதனதன் இயல்பின் தனித்தன்மை உடையதாகவே உள்ளது . இது ஏன் ?
ஏதேதோ காரணங்களால் தனித்தன்மை உருவாகிறது என்றால் , ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகமும் , குணம் , பழக்க வழக்கம் , நல்லது , கெட்டது மனிதனுக்கு மனிதன் வெவ்வேறாக ஏன் அமையக்கூடாது .
உலகில் இந்திய ஜோதிடம் என்பது காலத்தால் சோதிக்கப்பட்ட மிகப் பழமையான ஜோதிட முறையாகும் . ஜோதிஷ என்னும் சமஸ்கிரித வார்த்தை ஒளியின் விஞ்ஞானம் எனப் பொருள்படுகிறது . இந்து (அ) இந்து ஜோதிடத்தை மேலை நாட்டினர்கள் வேதாங்க ஜோதிடம் என்று அழைக்கிறார்கள் . வேத காலத்திலிருந்து ஜோதிட சாஸ்திரத்தின் சுவடுகள் தெரிகின்றன . நமது வேதங்களில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோதிட சாஸ்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது .
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை விதி என்ன ?
ஒரு கரு உருவாகும் நேரத்தைப் பொறுத்து எதிர்காலம் அமைகிறது . ஆண் , பெண் உடல் உறவால் , கருத்தரித்தல் அனைத்து மனிதர்களுக்கும் , ஒரே நேரத்தில் நடைபெறுவது இல்லை . இதனால் மாறுபட்ட ஜாதகம் அமையலாம் .
* கரு வளரும் காலத்தில் நிலவும் கோள்களின் கதிர் வீச்சு அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது கருவின் வளர்ச்சி தாய்க்கு தாய் அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து வேறுபடும் . இதன் காரணமாக ஒரே மாதிரி ஜாதகம் அமையாது போகலாம் .
* குழந்தை பிறக்கும் தருணத்தில் நிலவும் கோள்களின் கதிர்வீச்சு அமைப்பும் , அந்த நேரத்தில் இருந்த பிரபஞ்ச சக்தியுமே அந்த குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது .
* இந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று உள்ளது . அது பூர்வஜென்ம - பாவ புண்ணியங்களும் , முன்னோர்களது பாவ - புண்ணியங்களும் பிறக்கும் குழந்தைகளை வந்து சேர்கிறது. கர்மா ஒரு மனிதனின் விதியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதாகும் .இதை நமது வேதாங்க ஜோதிடம் உறுதியாக ஏற்றுக்கொள்கிறது .
* அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை , தீவினைகளின் தன்மையை பார்த்து , உணர்ந்து நல்வினை செய்தோர் நன்மைகளையும் , தீவினை செய்தோர் , தீமைகளையும் அடையும் படி பிரம்ம தேவனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாட்டின் படி அமைவதுதான் ஜாதகம் .
இந்த காரணத்தால் ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகம் , குணம் , நல்லது (அ) கெட்டது அனைத்தும் மனிதனுக்கு மனிதன் கண்டிப்பாக மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை . இதை அனுபவ பூர்வமாக நம் வாழ்க்கையில் அனுபவித்து வருவதே உறுதியான ஆதாரமாகும் .
சூரிய ஒளிக்கதிர்களும் , குருவின் ஒளிக்கதிர்களும் இணைந்து பூமியில் உள்ள ஜீவராசிகள் கருத்தரிக்கும் படிச் செய்கின்றன . மேலும் கர்ப்பத்தில் கருவளர்ச்சியில் மூன்றாம் மாதத்தில் இருந்து குறு கிரகமே காரணமாக கை , கால் , போன்றவை வழர வழி செய்கிறது , என்பதை வேத காலத்தில் வாழ்ந்த மகரிஷிகள் தெரிவித்த கருத்து , வேதாங்க ஜோதிடம் மூலம் தெரிய வருகிறது .
* தாய் கருவுற்றிருக்கும் போது சரியான ஊட்டச்சத்து உணவுகளை உண்ணவில்லை எனில் கருவளர்ச்சி பாதிக்கப்படுவதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
* கருவுற்றிக்கும் காலத்தில் தாய்க்கு ஏற்படும் நோய்கள் முக்கியமாக வைரஸ் தொற்றுதல் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
* தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கூட கருவை பாதித்து பிறவி நோய் (அ) ஊனம் ஏற்படுத்தலாம் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
* பிரபஞ்சத்திலிருந்து பூமியை நோக்கி செலுத்தப்படுகிற கதிரிகளிலுள்ள எக்ஸ் கதிர்கள் , காமா கதிர்கள் , ஆல்பா கதிர்கள் , நமது உடம்பில் உள்ள செல்களை பாதித்து மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
அப்படியானால் ஒரு கரு உருவாகும் , வளரும் மற்றும் ஜனன கால கட்டங்களில் பாதகமான கோள்களின் நிலையால் பிரபஞ்சக் கதிர்கள் , மனித கரு (அ) உடலில் ஊடுருவும் போது மாறுதல்களை ஏற்படுத்தி அக்குழந்தையின் ஜாதகத்தை மாற்றிவிடும் என ஜோதிடக்கலை கூறினால் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது .
பதவியில் இருக்கும் போது ஜனாதிபதி உயிரிழப்பு என்பது எல்லா நாடுகளிலும் நடப்பது இயல்பு . ஆனால் இதுவரை இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஏழு பேர் மட்டுமே பதவியில் இருக்கும் போது உயிர் இழந்துள்ளனர் . இந்த ஜனாதிபதிகள் அனைவருமே 20 வருடங்களுக்கு ஒரு முறை வரும் வியாழன் , சனி கிரகங்கள் சேர்க்கையின் போது பதவி ஏற்றவர்கள் .
அமெரிக்க ஜனாதிபதிகள் பதவி ஏற்ற வருடம் இறந்த காரணம்
வில்லியம் ஹாரிசன் 1840 நிமோனியா
ஆபிரகாம் லிங்கன் 1860 சுடப்பட்டார்
ஜேம்ஸ் ஹார்பீல்ட் 1880 சுடப்பட்டார்
வில்லியம் மெக்கின்லி 1900 சுடப்பட்டார்
வாரன் ஹார்டிங் 1920 மாரடைப்பு
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 1940 மூளையில் இரத்தக்கசிவு
ஜான் ஆர் . கென்னடி 1960 சுடப்பட்டார்
ரெனால்டு ரீகன் 1980 சுடப்பட்டார் (பிழைத்துக்கொண்டார் )
இதில் ரெனால்டு ரீகன் மட்டும் பிழைத்துக் கொண்டதற்கு காரணம் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் மிக நல்ல நிலையில் இருந்ததே என்பது பிரபல ஜோதிடர்களை கருத்து .
அபாயம் விளையும் 13 , 26 ம் தேதிகள் !
26 - 01 - 2001 நாட்டை உலுக்கிய குஜராத் பூகம்பம்
26 - 12 - 2004 சுனாமியால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
26 - 07 - 2005 மும்பையில் வரலாறு காணாத மழையின் பாதிப்பு
26 - 09 - 2008 ஆமதாபாத்தில் பெரிய குண்டு வெடிப்பு
26 - 11 - 2008 மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
13 - 12 - 2001 பயங்கரவாதிகள் பார்லிமென்ட் மீது தாக்குதல்
13 - 05 - 2008 ஜெயப்பூரில் குண்டு வெடிப்பு
13 - 09 - 2008 டில்லியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு
- ஆதாரம் தினமலர் 01 - 12 - 2008
இந்தியா சுதந்திரம் அடைந்து தற்பொழுது 62 ம் ஆண்டு ( 6 + 2 = 8 ) மற்றும் மேற்படியுள்ள சம்பவங்கள் ( 1 + 3 = 4 ), ( 2 + 6 = 8 ) ஆகியவற்றில் வரும் எண் . 4 ம் 8 ம் நல்ல எண் அல்ல என்று நமது மனித சமுதாயத்திலும் 8 ம் எண் ஜோதிடத்திலும் நம்பப்படுகிறது . ஏன்? ஜோதிட ஆராய்ச்சிக்கு உட்பட்டது .
ஜோரா இருக்குமா பங்கு சந்தை ? ஜோதிடர் கணித்துச் சொல்வார் .
இதற்க்கு முன்னணி நிறுவனங்கள் , ஜோதிட நிபுணர்களை வேலையில் அமர்த்தியுள்ளனர் . இவர்களுக்கு அதிகபட்சம் மாத ஊதியம் 1 . 5 லட்சம் சம்பளம் . ஒரு பல்கலைக் கழகத்தில் வேதம் பயின்ற ஜோதிட மாணவர்கள் 10 பேர்கள் உள்பட 20 பேருக்கு இந்த வேலை கிடைத்துள்ளது .
- ஆதாரம் தினகரன் 23 - 11 - 2008
இது ஜோதிடத்தின் மூலம் அறியப்படும் பலன்கள் துல்லியமாக வரும் என்பதற்கு அசைக்க முடியாத சான்றாகும் .
மேலே குறிப்பிட்ட ஆதாரங்களைக் கொண்டு பார்க்கும் போது ஜோதிடம் ஏமாற்று வேலை அல்ல , மெய்யே ! மெய்யே ! மெய்யே ! என்பதை ஆணித்தரமாக கூறலாம் .
ஆனால் இதை உதட்டளவில் , உண்மை இல்லை என்று கூறுபவர்களும் , அவர் நம் குடும்பத்தினரும் திரை மறைவில் ஜோதிடம் பார்க்கத் தவறுவதில்லை என்பதை நாம் கண்கூடாகக் பார்க்கின்றோம் . ஒரு நிர்பந்தத்தின் காரணமாக உள்ளத்தினால் அல்லாமல் , உதட்டளவில் மட்டுமே பிதற்றுகிறார்கள் .
ஆகவே நமக்கு ஜோதிடக்கலையை அருளிய விஞ்ஞானிகள் , மகரிஷிகளிடம் , அவர்களுக்கும் நல்லாசிகள் வழங்க பிரார்த்தனைகள் செய்வோம் .
வாழ்க ஜோதிடக்கலை !
நன்றி:யாழ் இணையம் 

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

ஜோதிடம், விதி, கர்ம வினை ஆகியவை உண்மை என்று வைத்துக்கொண்டால், மனித வாழ்வின் எந்த ஒரு நிகழ்வும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு உள்ளதல்லவா? அப்படியானால் அந்த நிகழ்வுகள் நடந்தே தீருமல்லவா? அப்புறம் அந்த நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்து ஆகப்போவதென்ன? அவைகளை மாற்றலாம் என்றால் அப்போது ஜோதிடம் முதலானவை பொய் என்று ஆகிறதல்லவா?

கருத்துரையிடுக