சனி, அக்டோபர் 29, 2016

இன்று நள்ளிரவில் நேர மாற்றம். மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (29.10.2016)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்டும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. 
அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,  
அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 2.10.2016 அன்றும் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது.
ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk 

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


"ஒன்றுபட்டு உயர்வோம்"
ஆசிரிய பீடம் 
அந்திமாலை. 

புதன், செப்டம்பர் 28, 2016

மரண அறிவித்தல்

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 'வேலன்சீமா' ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 'ராசா' என்று அழைக்கப்படும் வரப்பிரகாசம் மரியதாஸ் அவர்கள்(ஓய்வு பெற்ற தொலைபேசி இயக்குனர், ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை)  நேற்றைய தினம்
செவ்வாய்க்கிழமை(27.09.2016)  ஏழாலையில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற வரப்பிரகாசம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மலோசனியின் அன்புக் கணவரும், ராஜ மேனகன் (பொது சுகாதார பரிசோதகர், தெல்லிப்பழை), தாட்சாயணி (லண்டன்), வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ரோகிணி, தயானந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்க்ஷயா, அனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் 
காலஞ்சென்ற பத்மினி, ஜுலியஸ்(அல்லைப்பிட்டி), குணபாலசிங்கம் ( மல்லாவி, முல்லைத்தீவு), நித்தியலட்சுமி (வவுனியா) சரோஜினி(அல்லைப்பிட்டி), லிங்ககுரு(பிரேமா, வவுனியா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை(29.09.2016) முற்பகல் 9:00 மணியளவில் ஏழாலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஏழாலை மத்தி 'உசத்தி யோடை'  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: ராஜேஷ்குமார் ஜுலியஸ் (பெறாமகன்)

தொடர்புகளுக்கு: 
ராஜ மேனகன்(மகன்) தொலைபேசி: 0094- 21- 321 0928 / 0094771234623
ராஜேஷ்குமார் (பெறாமகன், பிரான்ஸ்) தொலைபேசி : 00 - 33651369352        

செவ்வாய், செப்டம்பர் 20, 2016

6 ஆவது ஆண்டில் உங்கள் அந்திமாலை

இணைய உலகில் கால் பதித்து ஆறு  ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாவது ஆண்டை நோக்கிப்
பயணிக்கும் இந்த நாளில் (20.09.2016) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 


உளமார்ந்த அன்புடன் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk

வெள்ளி, ஏப்ரல் 08, 2016

தமிழுக்கு மகுடம்

'தமிழுக்கு மகுடம்' எனும் தலைப்பில் ஒரு மகத்தான விழா ஒன்றினை டென்மார்க்கின் ஓகூஸ்(Aarhus) நகரத்தில் வாழும்
இளைஞர்களாகிய 'ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர்' ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படி விழா நாளை சனிக்கிழமை(09.04.2016) அன்று ஓகூஸ் நகரத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் டென்மார்க்கில் வாழும் அனைத்துத் தமிழ் உறவுகளும், முக்கியமாக 'ஓகூஸ் நகரத்தில்' வாழும் அனைத்து தமிழ்
உள்ளங்களும் தவறாது கலந்து கொண்டு தமிழுக்கும், இவ்விழாவுக்கும் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் வண்ணம் அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றேன். நிகழ்வில் சிந்தனைக்கு விருந்தளிக்கும் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும், கல்விமான்களின் உரையும் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக
அடியேன்(இரா.சொ.லிங்கதாசன்) அழைக்கப் பட்டுள்ளேன். அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்! என ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் சார்பிலும், என் சார்பிலும் உளமார்ந்த அன்போடு வேண்டி   நிற்கிறேன்.

உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.
நேரம்: பிற்பகல் 14:00 மணி 
விழா மண்டபம்: Vorrevangskolen, Vorregårds Alle 109, 8200 Aarhus N
தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கங்கள்: 31860112, 53575343


ஒன்றுபட்டு உயர்வோம்
மிக்க அன்புடன்
இரா.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
அந்திமாலை இணையம்

சனி, மார்ச் 26, 2016

இன்று நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் 26.03.2016 சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 27.03.2016 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது 
என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டுபின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து
வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது. 
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 13.03.2016 அன்று நிகழ்ந்தமையும், அவுஸ்திரேலியாவில் இந்த நேரமாற்றம்(கோடை காலத்துக்கான நேர மாற்றம்) எதிர்வரும் 03.04.2016 அன்று நிகழ உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை இணையம் 

ஞாயிறு, மார்ச் 20, 2016

சென்று வாருங்கள் பாலா அண்ணே!

இலங்கை யாழ்ப்பாணத்தில் எங்கள் கிராமமாகிய அல்லைப்பிட்டியில் நான் அறிந்தவரை எந்தப் பொது நிகழ்வு ஆனாலும் அதில் அக்கறையோடு
அந்திமாலையின் 'கவி வித்தகர்' விருதினை எமது பிரதிநிதி நிமால் கந்தசாமி அவர்கள் வழங்கியபோது.
பங்கெடுக்கும் ஒருவர் என்றால் அது நம் அனைவராலும் 'பாலா அண்ணை' என்றும் 'பாலசிங்கம்' என்றும் அழைக்கப் படும் சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரெட் அவர்கள்தான். அல்லையூரின் மூன்றாம் வட்டாரத்தில் மட்டுமன்றி இரண்டாம் வட்டாரத்திலும் நடக்கும் விழாக்களில் 'நிகழ்ச்சித் தொகுப்பாளர்' அவராகத்தான் இருப்பார்.அல்லைப்பிட்டியின் பிரபல கவிஞர்கள் பண்டிதர்.க.வ.ஆறுமுகம், பா.சத்தியசீலன் ஆகியோருடன் எனக்கு நேரடியாக எந்தவித அறிமுகமும் இல்லை. ஆனால் இவரோடும் இவரது கவிதைகளோடும் எனக்கு என் பத்தாவது வயதில் இருந்தே அறிமுகம். இவர் எங்கள் ஊருக்குள்ளேயே தனது திறமையைக் காட்டியதால் பெரிய அளவில் நாட்டின் ஏனைய பாகங்களில் அறியப்படாத 'குடத்துள் ஏற்றிய விளக்கு' ஆகிப் போனார். ஈழப் போராட்ட வரலாறு பற்றி மட்டுமன்றி எங்கள் 'அல்லைப்பிட்டிக் கிராமத்தின்' வரலாறு பற்றியும் நன்கு அறிந்த ஒரு மனிதர். சகல வரலாற்றுத் தகவல்களும் இவரது விரல் நுனியில் எனலாம்.
ஈழப் போராட்ட இயக்கங்கள் வெளியிட்ட 'புதிய பாதை', 'களத்தில்', 'பொதுமை', 'விடுதலைப் புலிகள்', 'பதாகை' மற்றும் 'தீப்பொறி' ஆகிய பத்திரிகைகளை சேகரித்து வைத்திருந்தமைக்காக 80 களின் இறுதியில் வடக்கு கிழக்கை ஆண்ட குழுவினரால் யாழ்ப்பாணம் 'அசோகா ஹோட்டலுக்கு' அழைக்கப் பட்டு நையப் புடைக்கப் பட்டார். ஒரு சில வாரங்களில் அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்து இந்திய ராணுவத்தின் தளபதி ஒருவரும், மேற்படி குழுவின் பொறுப்பாளர் ஒருவரும் இவரிடம் மன்னிப்புக் கோரினர்.
ரூபாய் பத்தாயிரத்துக்கான பணமுடிப்பை எமது நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ்வரன் சொர்ணலிங்கம் அவர்கள் வழங்கியபோது.
இத்தகைய சிறப்புக்கள் கொண்ட ஒரு மனிதன் 40 வருடங்களுக்கு மேலாக கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தும் யாரும் அதனை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஒரு சில கவிதைகள் இலங்கைப் பத்திரிகைகளில் வெளி வந்ததோடு சரி. இது எங்கள் கிராமத்துக் கலைஞனுக்கு செய்யப் படும் அநீதி என்று உணர்ந்தேன். இவரை ஒரு பொழுதேனும் கௌரவிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு ஏற்றாற் போல வாய்ப்புகள் வந்தது 2010 ஆம் ஆண்டில் 'அந்திமாலை' என்ற எங்கள் இணையத்தை தொடங்கியபோது  "இவரைக் கௌரவித்தல் வேண்டும்" என்ற யோசனையை எனது சகோதரன் 'சதீஸ்வரனும் ' முன் மொழிந்தார். அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் திரு.பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் நாங்கள் ஒரு சிறிய விழாவை நிகழ்த்தி அன்னாருக்கு 'கவி வித்தகர்' என்ற விருதை வழங்கி கௌரவித்தோம். எமது(அந்திமாலை) இணையம் சார்பாக மேற்படி விருதினை எமது பிரதிநிதி.நிமால் கந்தசாமி அவர்கள் வழங்கினார். எம்மால் வழங்கப் பட்ட ரூபாய் பத்தாயிரம் பண முடிப்பினை எமது நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எனது சகோதரர். சதீஸ்வரன் சொர்ணலிங்கம் வழங்கினார்.
பெற்றுக் கொண்ட விருதுடன் அமரர்.சந்தியாப்பிள்ளை வில்பிரெட் சேவியர்(பாலசிங்கம்) அவர்கள்.
என் வாழ்வில் நான் பார்த்து வியந்த ஆளுமைகள் இருவர். ஒருவர் 'மல்லிகை' சஞ்சிகையின் ஆசிரியர் திரு.டொமினிக் ஜீவா அடுத்தவர் அண்ணன் திரு.பாலசிங்கம் அவர்கள். இருவருடைய கல்விப் பின்னணியும் மிகக் குறைவானது ஆனாலும் இருவரும் தமது எழுத்து ஆற்றலில், ஆளுமையில் சிறந்தே விளங்கினர். நாற்பது வருடங்களாக தனது கவிப் பணியில் இடைவிடாது உழைத்த, தனது மண்ணை கடைசிவரை நேசித்து அந்த மண்ணுடனே உழன்று சகல பொதுப் பணிகளிலும் முன்னின்று உழைத்த ஒரு மனிதனுக்கு அத்தகைய ஒரு சிறு கௌரவத்தையேனும் வழங்காமல் விட்டிருந்தால் எங்கள் ஊரின் வரலாறு என்னைப் பழித்திருக்கும் என்பதே உண்மை.
"வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசி, விதி வந்தால் சாவோம்" என்று வாழ்வது அர்த்தமுள்ள வாழ்க்கை அல்ல என்று அமரர்.பாலா அண்ணை அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறுவார். இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் ஒன்று படுகிறோம். அவரிடம் அல்லைப்பிட்டியின் வரலாறு பற்றி செவி வழித் தகவல்களும், ஆதாரங்களும் இருந்தன. அவரை ஊருக்குச் செல்லும்போது சந்தித்துப் பேசி 'காணொளி' ஒன்று தயாரிக்க எண்ணியிருந்தேன். விதி முந்திக் கொண்டது. நாம் நினைக்கின்ற அத்தனையும் நடந்து விடுகிறதா என்ன? இருப்பினும் அந்தக் கலைஞனுக்கு என்னால் முடிந்த
அந்திமாலை இணையத்தால் அமரர்.பாலசிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுக்கான சான்றிதழ்.
ஒரு கௌரவத்தை அவர் வாழும் காலத்திலேயே அளித்துள்ளேன் என்பதில் எனக்கு ஒரு மன நிறைவு. அன்னார் தனது பிற்காலத்தில் எழுதிய ஆக்கங்களை, கவிதைகளை அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட அனைவரும் 'அல்லையூர் இணையத்திலும்', 'அந்திமாலையிலும்' படித்திருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.
சென்று வாருங்கள் பாலா அண்ணே! அல்லைப்பிட்டியின் மண் மறவாத மனிதர்களில் நீங்களும் ஒருவராக என்றென்றைக்கும் இருப்பீர்கள்.
அன்னாருக்கு எனது இதய அஞ்சலிகளைச் சமர்ப்பிப்பதோடு, அவரது பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"சீவியத்தில் என்னை நேசித்தவர்களே; மரணத்திலும் என்னை மறவாதிருங்கள்"

ஆழ்ந்த இரங்கலுடன்
அல்லையூரின் மைந்தர்களில் ஒருவன்
இரா.சொ.லிங்கதாசன்
டென்மார்க்.

புதன், பிப்ரவரி 24, 2016

சென்று வா நண்பனே!


திரு.குமரையா வித்தியாதரன்
மண்ணில்: 16.05.1956
விண்ணில்: 20.02.2016
கடந்த 20.02.2016 அன்று எம்மை எல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு திடீர் மறைவு எய்திவிட்ட எங்கள் அன்பு நண்பர், எம் உடன் பிறவா சகோதரர் திரு.குமரையா வித்தியாதரன் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்க முடியாத இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எமக்கும்தான். நல்ல முறையில் எல்லோருடனும் வேறுபாடு எதுவும் காட்டாது பழகக் கூடிய, உதவும் உள்ளம் கொண்ட, அறிவுசால் ஆளுமை படைத்த ஒரு இனிய நண்பரை இழந்து விட்டோம். அன்னாரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
எந்த அளவுக்கு தனது கொள்கைகளில், கருத்துக்களில் பிடிவாதமாக இருப்பாரோ அதே அளவு மென்மையான சுபாவமும், குழந்தை உள்ளமும் கொண்டவர் என்பது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. நல்ல செயல் ஒன்றை செய்ய வேண்டும் என்றால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டக் கூடியவர். துணிச்சல் மிக்கவர். தனது கருத்துக்களை எந்த இடத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இயல்பு கொண்டவர். இதனால் எந்த இழப்பு ஏற்பட்டாலும் அதனை இட்டுக் கவலைப்படும் குணம் அவரிடம் கிடையாது எனலாம். தனது கொள்கைகளை எந்த இடத்திலும், யாருக்காகவும், எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ அவர் தயாராக இருந்ததில்லை. அவரைப் பொறுத்தவரை சரி என்றால் சரி; தவறு என்றால் தவறு என்று எவரிடத்திலும் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்.  சொல்லிலும், செயலிலும் என்றும் நேர்மையாகவே வாழ்ந்தார். அவரைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவர் ஒரு நல்ல மனிதர். புரிந்து கொள்ளாதோர் அவரை ஒரு 'முரட்டுத் தனமான' மனிதராகவே பார்த்தனர்.
நமது நகரத்தில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்த தமிழர்களில், அறிவாளிகளில் அன்னாரும் முக்கியமான ஒருவர்.விளையாட்டு, பொது அறிவு, அரசியல் என பல துறைகளில் ஆர்வமும் அறிவும் படைத்தவர். அன்னாரின் திடீர் இழப்பு எம்மையெல்லாம் அதிர்ச்சியிலும், ஆறாத் துயரத்திலும் ஆழ்த்தி விட்டது. அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கிறோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)



                                                               இங்ஙனம் 
அன்னாரின் பிரிவால் துயருறும் 
ஃபிரெடெரிக்ஸ்ஹாவன்(Frederikshavan) ஷேபி(Sæby) நகர நட்புகள்.   


முக்கிய குறிப்பு: அன்னாருடைய இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(24.02.2016) டென்மார்க், ஃபிரெடெரிக்ஸ்ஹாவன் நகரத்தில் இலக்கம் 160,  Brønderslevvej , 9900 Frederikshavn இல் உள்ள Gærum Kirke தேவாலயத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணிவரை நடைபெற்று பூதவுடல் Hjørring நகரத்தில் உள்ள மின்னணு மயானத்தில் தகனம் செய்யப் படும் என அவரது குடும்பத்தினர் அறியத் தந்துள்ளனர். 

வெள்ளி, ஜனவரி 15, 2016

தைத்திருநாள் வாழ்த்துகள்



எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இந்தப் பொங்கல் திருநாளும் இனிவரும் நாட்களும் உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என வாழ்த்துகிறோம்.
"ஒன்றுபட்டு உயர்வோம்"

மிக்க அன்புடன் 
ஆசிரியர் 

-அந்திமாலை- 

ஞாயிறு, ஜனவரி 10, 2016

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்

கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. (1264)   

பொருள்: பிரிந்து சென்ற எனது காதலர் அன்போடு திரும்பி வருவார் என்று நினைத்து என் நெஞ்சம் மரக்கிளைகள் தோறும் ஏறிப் பார்க்கிறது.


சனி, ஜனவரி 09, 2016

கவியரசு கண்ணதாசன் பார்வையில் 'காதல்'

தாய்மையின் குழைவும் தந்தையின் பரிவும் பூமியின் பொறுமையும் பொறுப்புள்ள புன்னகையும் துணை வாடத் தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ அங்கே வாழ்வதுதான் காதல்!

காமம் முன்னால் தள்ள, நாணம் பின்னால் இழுக்கும் நாடகமே காதலில் சுவை.

இளமைக் காதலுக்கு இதயமில்லை. நடுப்பருவக் காதலுக்கு இதயமே தலைவன்.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்!


அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்... நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும்.
கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்!

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்!

இளமையிலே காதல்தான் ஒவ்வோர் உயிருக்கும் முதற்கொள்கை.

சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.

நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு
இது தலைமை வகிக்கிறது.

படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது. அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப்
பத்திரிகைககளின் மூலம் இது பெறுகிறது.

இது காதல்!
காதல் இரண்டு வகைப்படும். ஒன்று, தோல்வியுறுவது! மற்றொன்று, முப்பது வயதுக்கு மேல் வருவது!

இயற்கையை முறியடிக்க, எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள், காதலையும் முறியடிக்க முயன்றார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடும், அவர்களுக்கு காதல் இல்லாமலிருந்தால்!

கைகோர்த்துக்கொண்டு, கடற்கரைக்குப் போகும் காதல் நாகரிகம், வெகு விரைவில் காதலைக் கசப்பாக்கிவிடுகிறது.


நாம் மீண்டும் பழங்காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். தாழிட்ட கதவும் தடைப்பட்ட காதலுமாகத் தலைவனும் தலைவியும் போராடும் இலக்கியச் சுவைக்குத் திரும்பியாக வேண்டும்.

'காதல் கவி' கண்ணதாசன் பற்றிய சில குறிப்புகள்:

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி(சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு)

பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

நன்றி: ஃபாத்திமா, இலங்கை.  

வெள்ளி, ஜனவரி 08, 2016

இன்றைய சிந்தனைக்கு

 நகைச்சுவையான  தமிழ்நாட்டுப் பழமொழிகள் 

1. தோட்டுக்கு ஒரு துளையின்னா தோசைக்கு ஆயிரம் துளை.

2. பைசாவ எண்ணிப்புட்டு அதில இருக்கிற சிங்கத்தையும் எண்ணினானாம்.

3. எண்ணம் அறியா எலி எண்ணாயிரம் குட்டி போடுமாம். 

4. ஊத்துல பொறந்த விராலுக்கு ஆத்தப் பத்தி என்ன தெரியும்?

5. குடுமியில தீப்புடிச்சா பேனுக்குத்தான் கேடுன்னானாம். 

வியாழன், ஜனவரி 07, 2016

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரல்நசைஇ இன்னும் உளேன். (1263) 

பொருள்: வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருவதைக் காண விரும்பியே இன்னும் நான் உயிரோடிருக்கிறேன். 

புதன், ஜனவரி 06, 2016

தெரியாத சேதி: "ஆச்சி மறைந்தபோது ஒரு ஊரே சோகத்தில் மூழ்கியதாம்.

ஆச்சி மனோரமா அவர்கள் மறைந்தபோது அவரது பிறந்த ஊரான மன்னார்குடியில், அவரது மறைவால் மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினார்களாம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அக்கரைத் தெரு என்றழைக் கப்படும் ஜெயங்கொண்டநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காசி. இவரது முதல் மனைவி ராமாத்தாள். இவர்களது மகள் கோபிசாந்தா என்ற 'மனோரமா'.
மனோரமா 10 மாத குழந்தையாக இருந்தபோது, குடும்பப் பிரச்சினையால் ராமாத்தாள் குழந்தையை அழைத்துக்கொண்டு, காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டில் வேலை செய்து, மனோரமாவைப் படிக்க வைத்துள்ளார்.
படிக்கும்போதே நாடகத்தில் நடித்து, பின்னர் சென்னைக்குச் சென்று படங்களில் நடித்த மனோரமா, தான் பிறந்த மண்ணை மறக்காமல் இருந்துள்ளார். அவர் பிறந்த வீடு தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. மனோரமாவின் அண்ணன்கள் ஆறுமுகம், கிட்டு ஆகியோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, குலதெய்வமான மன்னார்குடி பாதாள வீரன் கோயிலுக்கு மனோரமா வந்துள்ளார். அக்கிராமத்தில் உள்ள சில உறவினர்களுடன் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
மனோரமாவுக்கு பத்ம விருது வழங்கியபோது, மன்னார்குடியில் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். அப்போதுதான், மனோரமா மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பது பொதுமக்கள் பலருக்கும் தெரிந்துள்ளது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.


மாலையிட்ட மங்கை…
முன்னாள் எம்எல்ஏ மன்னை மு.அம்பிகாபதி ‘தி இந்து’விடம் கூறும்போது, “மனோரமாவின் அண்ணன் கிட்டுவும், நானும் நாடகம் நடத்தி வந்தோம். 1957-ல் நடைபெற்ற தேர்தலில் திருக்கோஷ்டியூரில் கண்ணதாசன் போட்டியிட்டபோது, நான் அவருக்கு ஏஜன்டாக செயல்பட்டேன். தேர்த லில் கண்ணதாசன் தோல்வியைத் தழுவினார். பின்னர் அவர் சென்னை யில் படம் எடுக்கச் சென்றார். அங்கு ‘மாலையிட்ட மங்கை’ படத்தை தயாரித்தார்.
இந்நிலையில், கண்ணதாசன் என்னைக் கூப்பிட்டு, “உங்கள் ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிக்க வந்துள்ளார்” என்றார். நான் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தேன். அப்போதுதான், எனது நண்பர் கிட்டுவின் தங்கை மனோரமா படத்தில் நடிப்பது தெரியவந்தது. உடனே, நான் கண்ணதாசனிடம் “மனோரமா எனது சொந்தகாரப் பெண்தான்” என்றேன். இதையடுத்து, மனோர மாவை படத்தில் நடிக்க வைத்த கண்ணதாசன், “ஹீரோயினாக நடித்தால் 3, 4 படங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவாய். உன்னிடம் திறமை உள்ளது. நகைச் சுவை நடிகையாக நடித்தால்தான் லைஃப் உண்டு” என்றார். இதை யடுத்து, மனோரமா நகைச்சுவை நடிகையாக நடித்தார்.

மனோரமாவுக்கு தேசப்பற்று அதிகம். இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, தனது நகைகளை யெல்லாம் கழற்றி, அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் கொடுக்குமாறு தமிழக ஆளுநரிடம் வழங்கினார். மேலும், தமிழகம் முழுவதும் நாடகங்கள் நடித்து, நிதியைத் திரட்டிக் கொடுத்தார். மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் மனோரமா” என்றார்.
நன்றி: தி.இந்து 

செவ்வாய், ஜனவரி 05, 2016

இன்றைய சிந்தனைக்கு

அராபியப் பழமொழி 

உன்வாழ்வில் நீ யாரோடெல்லாம் சிரித்து மகிழ்ந்தாய் என்பது உனக்கு மறந்துபோகலாம். ஆனால் யாரோடு சேர்ந்து அழுதாய் என்பது உனக்கு மறக்காது.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்


இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் 
கலங்கழியும் காரிகை நீத்து (1262)

பொருள்: தோழி! (என்னை)விட்டுச் சென்ற காதலரை இன்று நான் மறந்து விடுவேனாகில், அழகிழந்து தோள்கள் மெலியும்; தோள்களை விட்டு அணிகளும் கழலும்படி நேரும்.

ஞாயிறு, ஜனவரி 03, 2016

ஜோதிடம் மெய்யா? பொய்யா?

ஆக்கம்: O.M. பெருமாள்,B.Pharm.,P.G.D.C.A.,D.V.P.,
D.A. (Astrology).,
M.A (Astrology)., MICAS
( P.S.ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மைய உறுப்பினர் )
U.S.A
இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்புகொள்ளும் அளவில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன . சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே வானில் உள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் முன்னோர்கள் நிருபர்களாக இருந்திருக்கின்றனர் .
அந்தக் காலத்தில் வான சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரமும் ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்திருக்கின்றன . மத குருமார்களோ வானியல் வல்லுனர்களாக , ஜோதிட விற்பன்னர்களாக அரசுக்கு ஆலோசர்களாகக் கோலோச்சி இருந்தார்கள் . அவர்களின் கணிப்புன் அப்படியே பலித்தது .
கலிலியோவும் ,நியூட்டனும் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே கன்னடா , பாஸ்கரா , ஆரியப்பட்டா போன்ற வான சாஸ்திர நிபுணர்கள் இந்தியாவில் தோன்றி வானியல் குறித்து பல அற்புத உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர் .

பைபிளிலும் பண்டைய எகிப்திய சீன நூல்களிலும் , நமது மகாபாரதம் , ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் வருங்கால நிகழ்வுகளை கணித்ததாக பல குறிப்புகள் உள்ளன .
மாவீரன் அலெக்ஸ்சான்டரின் அரண்மனையில் இந்திய ஜோதிட நிபுணர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் அலெக்ஸ்சான்டரின் ஜாதகத்தை கணித்து பாபிலோன் நகரில் நீங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்து இருக்கிறார்கள் . இதனால் பல ஆண்டுகள் பாபிலோன் நகருக்கு அலெக்ஸ்சாண்டார் போவதை தவிர்த்து வந்தார் . இறுதியாக வேறு வழியின்றி பாபிலோன் நகருக்கு சென்ற போது , இந்திய ஜோதிடர்கள் கணித்த படி , எதிரிகளால் உணவில் , விஷம் வைத்து கொல்லப்பட்டார் . ஜோதிடம் பலித்தது .
இயேசு கிறிஸ்து பிறந்த போது , ஏரோது மன்னனின் அரண்மனையில் இருந்த ஜோதிட நிபுணர்கள் யூத குலத்தில் ஒரு குழந்தை பிறப்பதாகவும் , அந்த குழந்தை யூத மக்களின் தலைவனாக மாறுவான் , ஏரோது மன்னனின் பரம்பரை ஆட்சி அழிந்து விடும் என எச்சரித்தனர் .
இதனால் கலக்க மடைந்த ஏரோது மன்னன் தனது நாட்டிலுள்ள ஒரு வயதிற்கு உட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விட உத்தரவிட்டான் . ஆனால் இயேசு தப்பித்தார் . யூதர்களை காக்கும் கடவுளாகவே மதிக்கப்பட்டார் . ஜோதிடம் பலித்தது .
கம்சன் கதையும் கிட்டத்தட்ட இதுவேதான் . தனது தங்கைக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்லியதால் , தங்கையையும் அவளது கணவனையும் சிறையில் அடைத்து பிறந்த குழந்தைகளைக் கொன்றான் . ஆனாலும் கிருஷ்ணன் தப்பிக்கக் கடைசியில் கம்சனை வதம் செய்தார் . ஜோதிடம் பலித்தது .
ஜூலியஸ் சீசரின் அரண்மனையில் ஸ்பூரினா என்ற புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் இருந்தார் . தனது நண்பர்களாலேயே ஜூலியஸ் சீசர் கொல்லப்படுவார் என சீசரை முன் கூட்டியே எச்சரித்திரிந்தார் . அப்படியே நடந்தது . ஜோதிடம் பலித்தது .

நெப்போலியன் காலத்தில் லினோர் மாண்ட் என்ற பெண் ஜோதிட நிபுணர் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் . மாஸ்கோ மீது படையெடுத்துச் சென்றால் தோல்வி நிச்சயம் என இவர் நெப்போலியனை எச்சரித்தார் . ஆனால் அதை நெப்போலியன் பொருட்படுத்தாமல் ரஷ்யா மீது படை நடத்திச் சென்று தோல்வியைத் தழுவினார் . ஜோதிடம் பலித்தது .
இவ்வாறு பண்டைகாலம் தொட்டே வரலாற்றின் பக்கங்களில் ஜோதிடக் கலைக்கு பல ஆதாரங்கள் உள்ளன .
குழந்தைகள் பிறந்த மாதம் , நேரம் அடிப்படையில் ஜாதகம் கணிக்கும் வழக்கும் ஏற்பட்டு , புதிய பாபிலோனின் காலம் கி . மு . 600 முதல் 300 வரை உள்ள காலக் கட்டத்தில் கணிக்கப்பட்ட 16 ஜாதகங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .
இப்படி உயர்ந்த கலையாக , விஞ்ஞானமாகக் போற்றப்பட்ட ஜோதிடம் இன்று வெறும் ஏமாற்று வேலை , உண்மையில்லை என்று இதன் வரலாறு , சூட்சமங்கள் அறியாமையில் பிதற்றுகிறார்கள் .
ஜோதிடக் கலையை இவர்கள் மறுப்பதற்கு அடிப்படை காரணம் ஒன்று தான் . கிரகங்கள் , சூரிய , சந்திரர்கள் , மனிதர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை உண்மை என்று ஒத்துக்கொண்டாலும் , இந்த தாக்கங்கள் பூமியில் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி ஜாதகம் , குணநலன் தானே அமையும் . எப்படி மாறுதல் , வித்தியாசம் ஏற்படும் என்பது தான் . இதனால் ஜோதிடம் உண்மையில்லை என்று கூறுகிறார்கள் .
நாம் அவர்களுக்கு வைக்கப்படும் கேள்விகள் சில :
* ஒரு மனிதனின் செயல்பாடும் , உருவ அமைப்பும் , எண்ணங்களும் , மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் , ஒரே பெற்றோருக்கு பிறந்த அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியாக இல்லையே ? உருவ அமைப்பிலும் , செயல்பாடுகளிலும் , எண்ணங்களிலும் , ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளதே ஏன் ?
* ஒரே நேரத்தில் பத்துப்பேர் சேர்ந்து ஒரே வகை உணவை உண்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . அதில் ஒருவருக்கு மட்டும் ஏன் வாந்தி , பேதி போன்றவை ஏற்படுகிறது . இது உணவில் உள்ள கிருமிகளால் ஏற்பட்டிருக்கும் என பதில் கூறுவார்களானால் மற்ற ஒன்பது பேரும் அதே உணவை தானே உட்கொண்டார்கள் ? அவர்களை ஏன் அந்த நோய்க்கிருமிகள் தாக்கவில்லை ?
*ஒரு வகுப்பில் இருக்கும் 40 மாணவர்களுக்கும் பொதுவாகத்தான் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . ஆனால் ஒரு மாணவன் 100 மார்க்கும் , வேறு ஒருவன் ' 0 ' மார்க்கும் வாங்குகிறான் . ஏன் இந்த வேறுபாடு ?
இது போன்று ஆயிரம் கேள்விகளை நாம் அவர்களிடம் கேட்கலாம் . அவர்களும் பல பதில்கள் கூறுவார்கள் . இந்த கேள்வி பதில் அனைத்தையும் அலசிப் பார்த்தால் அடிப்படைக் கருத்து ஒன்று இருப்பதை உணர முடியும் .
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை , ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லை . ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய தனித்தன்மைகள் உள்ளன .
ஒரு மனிதனின் கைரேகையைப்போல் இன்னொரு மனிதனின் கைரேகை இருப்பதில்லை . இதன் அடிப்படையிலேயே குற்றங்களைக் கண்டுபிடிக்க தடைய இயல் வல்லுனர்கள் கை ரேகையில் துணையை நாடுகின்றனர் . இது ஏன் ?
மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் , தாவரங்களுக்கும் கூட இது பொருந்தும் , ஒரே வகை மரத்தில் கூட ஒவ்வொரு மரமும் , ஒவ்வொரு வகை கிளைகள் , இலைகள் வளரும் , இது ஏன் ?
வண்ணத்துப் பூச்சிகளில் பல வகைகள் உண்டு . ஆனால் ஒரே வகை வண்ணத்துப்பூச்சியில் கூட வெவ்வேறு வகை, வண்ணக் கலவைகளுடன் காணப்படுகிறது . ஒரு வண்ணத்துப் பூச்சியை போல் மற்றொரு வண்ணத்துப் பூச்சி இருப்பதில்லை . இது ஏன் ?
இயற்கையின் படைப்பில் எந்த ஒரு பொருளும் அச்சு அசலாக ஒன்று போல் இருப்பதில்லை . ஒவ்வொன்றும் அதனதன் இயல்பின் தனித்தன்மை உடையதாகவே உள்ளது . இது ஏன் ?
ஏதேதோ காரணங்களால் தனித்தன்மை உருவாகிறது என்றால் , ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகமும் , குணம் , பழக்க வழக்கம் , நல்லது , கெட்டது மனிதனுக்கு மனிதன் வெவ்வேறாக ஏன் அமையக்கூடாது .
உலகில் இந்திய ஜோதிடம் என்பது காலத்தால் சோதிக்கப்பட்ட மிகப் பழமையான ஜோதிட முறையாகும் . ஜோதிஷ என்னும் சமஸ்கிரித வார்த்தை ஒளியின் விஞ்ஞானம் எனப் பொருள்படுகிறது . இந்து (அ) இந்து ஜோதிடத்தை மேலை நாட்டினர்கள் வேதாங்க ஜோதிடம் என்று அழைக்கிறார்கள் . வேத காலத்திலிருந்து ஜோதிட சாஸ்திரத்தின் சுவடுகள் தெரிகின்றன . நமது வேதங்களில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோதிட சாஸ்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது .
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை விதி என்ன ?
ஒரு கரு உருவாகும் நேரத்தைப் பொறுத்து எதிர்காலம் அமைகிறது . ஆண் , பெண் உடல் உறவால் , கருத்தரித்தல் அனைத்து மனிதர்களுக்கும் , ஒரே நேரத்தில் நடைபெறுவது இல்லை . இதனால் மாறுபட்ட ஜாதகம் அமையலாம் .
* கரு வளரும் காலத்தில் நிலவும் கோள்களின் கதிர் வீச்சு அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது கருவின் வளர்ச்சி தாய்க்கு தாய் அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து வேறுபடும் . இதன் காரணமாக ஒரே மாதிரி ஜாதகம் அமையாது போகலாம் .
* குழந்தை பிறக்கும் தருணத்தில் நிலவும் கோள்களின் கதிர்வீச்சு அமைப்பும் , அந்த நேரத்தில் இருந்த பிரபஞ்ச சக்தியுமே அந்த குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது .
* இந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று உள்ளது . அது பூர்வஜென்ம - பாவ புண்ணியங்களும் , முன்னோர்களது பாவ - புண்ணியங்களும் பிறக்கும் குழந்தைகளை வந்து சேர்கிறது. கர்மா ஒரு மனிதனின் விதியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதாகும் .இதை நமது வேதாங்க ஜோதிடம் உறுதியாக ஏற்றுக்கொள்கிறது .
* அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை , தீவினைகளின் தன்மையை பார்த்து , உணர்ந்து நல்வினை செய்தோர் நன்மைகளையும் , தீவினை செய்தோர் , தீமைகளையும் அடையும் படி பிரம்ம தேவனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாட்டின் படி அமைவதுதான் ஜாதகம் .
இந்த காரணத்தால் ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகம் , குணம் , நல்லது (அ) கெட்டது அனைத்தும் மனிதனுக்கு மனிதன் கண்டிப்பாக மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை . இதை அனுபவ பூர்வமாக நம் வாழ்க்கையில் அனுபவித்து வருவதே உறுதியான ஆதாரமாகும் .
சூரிய ஒளிக்கதிர்களும் , குருவின் ஒளிக்கதிர்களும் இணைந்து பூமியில் உள்ள ஜீவராசிகள் கருத்தரிக்கும் படிச் செய்கின்றன . மேலும் கர்ப்பத்தில் கருவளர்ச்சியில் மூன்றாம் மாதத்தில் இருந்து குறு கிரகமே காரணமாக கை , கால் , போன்றவை வழர வழி செய்கிறது , என்பதை வேத காலத்தில் வாழ்ந்த மகரிஷிகள் தெரிவித்த கருத்து , வேதாங்க ஜோதிடம் மூலம் தெரிய வருகிறது .
* தாய் கருவுற்றிருக்கும் போது சரியான ஊட்டச்சத்து உணவுகளை உண்ணவில்லை எனில் கருவளர்ச்சி பாதிக்கப்படுவதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
* கருவுற்றிக்கும் காலத்தில் தாய்க்கு ஏற்படும் நோய்கள் முக்கியமாக வைரஸ் தொற்றுதல் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
* தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கூட கருவை பாதித்து பிறவி நோய் (அ) ஊனம் ஏற்படுத்தலாம் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
* பிரபஞ்சத்திலிருந்து பூமியை நோக்கி செலுத்தப்படுகிற கதிரிகளிலுள்ள எக்ஸ் கதிர்கள் , காமா கதிர்கள் , ஆல்பா கதிர்கள் , நமது உடம்பில் உள்ள செல்களை பாதித்து மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
அப்படியானால் ஒரு கரு உருவாகும் , வளரும் மற்றும் ஜனன கால கட்டங்களில் பாதகமான கோள்களின் நிலையால் பிரபஞ்சக் கதிர்கள் , மனித கரு (அ) உடலில் ஊடுருவும் போது மாறுதல்களை ஏற்படுத்தி அக்குழந்தையின் ஜாதகத்தை மாற்றிவிடும் என ஜோதிடக்கலை கூறினால் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது .
பதவியில் இருக்கும் போது ஜனாதிபதி உயிரிழப்பு என்பது எல்லா நாடுகளிலும் நடப்பது இயல்பு . ஆனால் இதுவரை இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஏழு பேர் மட்டுமே பதவியில் இருக்கும் போது உயிர் இழந்துள்ளனர் . இந்த ஜனாதிபதிகள் அனைவருமே 20 வருடங்களுக்கு ஒரு முறை வரும் வியாழன் , சனி கிரகங்கள் சேர்க்கையின் போது பதவி ஏற்றவர்கள் .
அமெரிக்க ஜனாதிபதிகள் பதவி ஏற்ற வருடம் இறந்த காரணம்
வில்லியம் ஹாரிசன் 1840 நிமோனியா
ஆபிரகாம் லிங்கன் 1860 சுடப்பட்டார்
ஜேம்ஸ் ஹார்பீல்ட் 1880 சுடப்பட்டார்
வில்லியம் மெக்கின்லி 1900 சுடப்பட்டார்
வாரன் ஹார்டிங் 1920 மாரடைப்பு
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 1940 மூளையில் இரத்தக்கசிவு
ஜான் ஆர் . கென்னடி 1960 சுடப்பட்டார்
ரெனால்டு ரீகன் 1980 சுடப்பட்டார் (பிழைத்துக்கொண்டார் )
இதில் ரெனால்டு ரீகன் மட்டும் பிழைத்துக் கொண்டதற்கு காரணம் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் மிக நல்ல நிலையில் இருந்ததே என்பது பிரபல ஜோதிடர்களை கருத்து .
அபாயம் விளையும் 13 , 26 ம் தேதிகள் !
26 - 01 - 2001 நாட்டை உலுக்கிய குஜராத் பூகம்பம்
26 - 12 - 2004 சுனாமியால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
26 - 07 - 2005 மும்பையில் வரலாறு காணாத மழையின் பாதிப்பு
26 - 09 - 2008 ஆமதாபாத்தில் பெரிய குண்டு வெடிப்பு
26 - 11 - 2008 மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
13 - 12 - 2001 பயங்கரவாதிகள் பார்லிமென்ட் மீது தாக்குதல்
13 - 05 - 2008 ஜெயப்பூரில் குண்டு வெடிப்பு
13 - 09 - 2008 டில்லியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு
- ஆதாரம் தினமலர் 01 - 12 - 2008
இந்தியா சுதந்திரம் அடைந்து தற்பொழுது 62 ம் ஆண்டு ( 6 + 2 = 8 ) மற்றும் மேற்படியுள்ள சம்பவங்கள் ( 1 + 3 = 4 ), ( 2 + 6 = 8 ) ஆகியவற்றில் வரும் எண் . 4 ம் 8 ம் நல்ல எண் அல்ல என்று நமது மனித சமுதாயத்திலும் 8 ம் எண் ஜோதிடத்திலும் நம்பப்படுகிறது . ஏன்? ஜோதிட ஆராய்ச்சிக்கு உட்பட்டது .
ஜோரா இருக்குமா பங்கு சந்தை ? ஜோதிடர் கணித்துச் சொல்வார் .
இதற்க்கு முன்னணி நிறுவனங்கள் , ஜோதிட நிபுணர்களை வேலையில் அமர்த்தியுள்ளனர் . இவர்களுக்கு அதிகபட்சம் மாத ஊதியம் 1 . 5 லட்சம் சம்பளம் . ஒரு பல்கலைக் கழகத்தில் வேதம் பயின்ற ஜோதிட மாணவர்கள் 10 பேர்கள் உள்பட 20 பேருக்கு இந்த வேலை கிடைத்துள்ளது .
- ஆதாரம் தினகரன் 23 - 11 - 2008
இது ஜோதிடத்தின் மூலம் அறியப்படும் பலன்கள் துல்லியமாக வரும் என்பதற்கு அசைக்க முடியாத சான்றாகும் .
மேலே குறிப்பிட்ட ஆதாரங்களைக் கொண்டு பார்க்கும் போது ஜோதிடம் ஏமாற்று வேலை அல்ல , மெய்யே ! மெய்யே ! மெய்யே ! என்பதை ஆணித்தரமாக கூறலாம் .
ஆனால் இதை உதட்டளவில் , உண்மை இல்லை என்று கூறுபவர்களும் , அவர் நம் குடும்பத்தினரும் திரை மறைவில் ஜோதிடம் பார்க்கத் தவறுவதில்லை என்பதை நாம் கண்கூடாகக் பார்க்கின்றோம் . ஒரு நிர்பந்தத்தின் காரணமாக உள்ளத்தினால் அல்லாமல் , உதட்டளவில் மட்டுமே பிதற்றுகிறார்கள் .
ஆகவே நமக்கு ஜோதிடக்கலையை அருளிய விஞ்ஞானிகள் , மகரிஷிகளிடம் , அவர்களுக்கும் நல்லாசிகள் வழங்க பிரார்த்தனைகள் செய்வோம் .
வாழ்க ஜோதிடக்கலை !
நன்றி:யாழ் இணையம்