வியாழன், ஏப்ரல் 30, 2015

கலைஞருக்கு மரியாதை

அன்புறவுகளே வணக்கம்.
நீண்டதொரு இடைவெளியின் பின் எழுதுகிறேன்.நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.நானும் நலமே. முக்கியமான ஒரு நிகழ்வை உங்களிடம் பதிவு செய்கிறேன்.டென்மார்க்கில் வாழும் கலைஞர்களில் முக்கியமான, குறிப்பிடத் தக்க ஒருவரும், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவருமான கவிதாயினி.திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களை ஓகூஸ் தமிழர் ஒன்றியம் எதிர்வரும் சனிக்கிழமை அன்று(02.05.2015) விழா எடுத்துக் கௌரவிக்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும் நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். "திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி" என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேற்படி விழாவின் நிகழ்ச்சி நிரலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"
மிக்க அன்புடன் 
இ.சொ.லிங்கதாசன் 
ஆசிரியர் 
அந்திமாலை 
 
 


செவ்வாய், ஏப்ரல் 07, 2015

ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அறிவித்தல்


அனைவருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகூஸ் நகரத்தில் வசிக்கும்; 'கவிதாயினி' திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் தினத்தில் (02.05.2015) இவரை வாழ்த்த விரும்புபவர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.

இங்ஙனம்
க .துஷ்யந்தன் 
ஓகூஸ்  தமிழர் ஒன்றியம்
டென்மார்க்