சனி, மார்ச் 10, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.6

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.6
அல்லைப்பிட்டி 1977
"நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் எத்தனை நூற்றாண்டுகள் நின்று நிலைத்து இந்தப் பூமியை அழிக்க இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் சிந்திப்போம்."
என்ற வரிகளுடன் கடந்த இரு வாரங்களுக்கு முந்திய தாரமும் குருவும் பகுதி 6.4 ஐ நிறைவு செய்திருந்தேன்.இத் தொடரினை பல வாரங்களாக தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் ஒரு சிலருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அதாவது அல்லைப்பிட்டியைப் பற்றி கூறப் புகுந்த நான் இடையில் அதனை நிறுத்தி விட்டு எனது பார்வையை 'மாலைதீவின்' பக்கமும், 'பூமி வெப்பமடைதல்' பற்றியும் 'பிளாஸ்டிக்கினால் இந்த உலகிற்கு ஏற்பட இருக்கும் கேடு பற்றியும் கடந்த சில அத்தியாயங்களில் விரிவாக ஆராய்ந்து எழுதியிருந்தேன். அல்லைப்பிட்டிக்கும் மேற்படி விடயங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்று கூட உங்களில் ஒரு சிலர் சிந்தித்திருக்கக் கூடும். ஆனாலும் மனிதர்களின் தவறுகளால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட தீவுகள் அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே போல மனிதர்களின் கடந்தகால, நிகழ்கால தவறுகளால் எங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல தீவுகளும் அழிந்து போகும் வாய்ப்பு உண்டல்லவா? அதில் எனது கிராமமாகிய அல்லைப்பிட்டியும் அடங்குகிறது என்றே நான் கருதுகிறேன். இப்போது மாலைதீவுக்கும், புவி வெப்பமடைதலுக்கும் அல்லைப்பிட்டிக்கும் என்ன சம்பந்தம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இவ்வளவு காலமும் பொறுமையாக எனது தொடரை வாசித்து வரும் அன்பு வாசக உள்ளங்களில் ஒருவராவது எனது இத் தொடரை வாசித்துச் சிந்தித்துச் செயலாற்றியிருந்தால் அதுவே எனது எழுத்துக்குக் கிடைத்த வெற்றி என நான் கருதுவேன். எனது இந்தத் தொடர் அல்லைப்பிட்டி பற்றிய முழுமையான ஒரு பார்வையை உங்களுக்கு வழங்குகிறதா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். எனது நோக்கமெல்லாம் எங்கள் கிராமத்தைச் சாராத ஒருவர், இணையத்தில்(Google இல்) 'அல்லைப்பிட்டியைப்' பற்றித் தேடினால் அவருக்குப் போதும், போதும் என்று கூறத் தக்க அளவில் தகவல்கள் கிடைக்க வேண்டும் என்பதே. அதில் ஒரு சிறிய பங்கை என்னால் முடிந்த வரையில் எனது இந்தத் தொடரின் மூலம் இட்டு நிரப்பி உள்ளேன். தற்போது கூகுளில் அல்லைப்பிட்டியைப் பற்றித் தேடினால் எனது தொடரையும் கூகுள் நிறுவனம் தேடுதலுக்குரிய  விடையாகத்(Searching result) தருகிறது. இதை எனது முயற்சிக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன். இனி வரும் காலங்களில் எங்கள் அல்லைப்பிட்டிக் கிராமத்தைப் பற்றி வரலாறு, சமூகம், புவியியல் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுத இருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.


உப பிரிவு அ. 


'அல்லைப்பிட்டி' பெயர்க் காரணம் 
'அல்லைப்பிட்டி' என்று உங்கள் கிராமத்திற்குப் பெயர் ஏற்படக் காரணம் என்ன? என்று அல்லைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட அல்லது அல்லைப்பிட்டியில் பிறந்து வளர்ந்த ஒருவரைக் கேட்டால் உடனடியாகக் கிடைக்கும் பதில் இதுதான் "அது அல்லி அரசாணி(அல்லி ராணி) ஆண்ட இடம், அதுதான் அல்லைப்பிட்டி என்று பெயர் வந்தது". "முதலில் அல்லியின் பெயரில் தொடங்கும் 'அல்லிப் பிட்டி' என்று இருந்து பின்னர் 'அல்லைப் பிட்டி' என்று மருவியது" என்று பதில் கிடைக்கும். நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் முதலாவது விடயமே இந்தப் பதில் எந்தளவுக்கு உண்மையானது? எனபதுதான்.மேற்படி பதில் எந்தளவுக்கு வரலாற்று ரீதியான உண்மை? என்பதையும் எதிர்வரும் வாரங்களில் ஆராய இருக்கிறேன். மேற்படி கருத்து பொய்யானது என்று நிரூபிப்பதால் எனக்கு எந்தவிதமான லாபமும் கிட்டப் போவதில்லை. ஆனால் சந்ததி சந்ததியாக ஒரு தவறான கருத்தை நாம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதிலிருந்து விடுபட வேண்டியது அந்த ஊரில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவருடைய கடமையும் அல்லவா?
சரி, மேற்படி 'அல்லி இராணி' அல்லது 'அல்லி அரசாணி' விடயத்தை அல்லைப்பிட்டி பற்றிய கேள்விக்குப் பதிலாக "அள்ளி விடும்" ஒருவரிடம் "அந்த அல்லி அரசாணி எந்தக் காலப் பகுதியில் அல்லைப்பிட்டியை ஆண்டார்? "அவர் அல்லைப்பிட்டியை மட்டும் தனது ஆட்சிப் பகுதியாகக் கொண்டிருந்தாரா? "இலங்கையை 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பியர்கள் ஆண்டார்கள்.ஆகவே இந்த அல்லி ராணியின் காலம் எத்தனையாம் நூற்றாண்டு? என்றெல்லாம் கேட்போமாக இருந்தால் பதில் எதுவுமே கிடைக்காது. காரணம் இந்த 'அல்லி ராணி சமாச்சாரமே' நமது முப்பாட்டன், கொப்பாட்டன் காலத்திலிருந்து சந்ததி சந்ததியாகக் கூறப்பட்டு வரும் ஒரு 'புனைவுக் கதை' என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
(இன்னும் சொல்வேன்)

3 கருத்துகள்:

hn சொன்னது…

அல்லைப்பிட்டியின் அவலநிலையை அறிந்தேன் அதன்ஊடாக அகிலம் வெப்பமடைகிற அலங்கோலங்களும் புரிந்தேன். ஐந்து கட்டைக்குள் உள்ள எனது தேவைகளை மிதிவண்டியில் சென்று நிறைவேற்றுவதாக முடிவூகள் எடுத்தும் பூரணமாக முடியவில்லை.

ஆனால் ஒன்று முடிந்தது. கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கின்றபோது பிளாஸ்ரிக் பை வாங்குவதில்லை அதற்குப்பதிலாக நான் நெடுங்காலமாகவே துணியினால் செய்த பையை மீண்டும் மீண்டும் உபயோகித்து வருகிறேன். பணமும் மிச்சம். நீங்களும் முயற்சி செய்யலாமே?

vetha (kovaikkavi) சொன்னது…

vaalthukal allipiddy info feed in google....

vinothiny pathmanathan dk சொன்னது…

nice

கருத்துரையிடுக