திங்கள், பிப்ரவரி 13, 2012

நண்டு கொழம்பு சாப்பிட்டா ஜலதோஷம் போகுமா...?


ஆக்கம்: தோழன் மபா, சென்னை, தமிழ்நாடு 
சனி புடிச்சாலும் புடிக்கலாம் சளி புடிக்கக் கூடாதும்பாங்க. அப்படித்தான் ஆகிப்போச்சுதுங்க. சும்மா 'ங்கொன...ங்கொன'ன்னு பேசாஆரம்பிச்ச நானு...போகப்போக வாயால மூச்சுவிட ஆரம்பிச்சிட்டேன்.  படுக்க முடியுல தூங்க முடியுல.  கை கால் வலி,  கொடச்சல், இரும்புனதுல்ல மாரு வலின்னு உடம்பு பூரா வலி நீக்கமற நிறைஞ்சிருக்கு.  


தெரு மொனையில இருக்கிற வைஷ்ணவி மெடிக்கல் ஷாப்புல ரெண்டு வேளைக்கு மாத்திர வாங்கி சாப்புட்டதுல்ல கொஞ்சம் பரவாயில்லாம இருந்தது.  அப்படியும் ஒன்னும் சரியாவுல.  ஜலதோஷத்திற்கு மாத்திர சாப்பிட்டா ஒரு வாரத்தில சரியாகும். இல்லனா....ஏழு.ழு..ழு நாள் ஆகும்பாங்க. அப்படி ஆகிப்போச்சுதுங்க நம்ம நெலமை.  

சிந்தி சிந்தி மூக்கு ரணமா மாறுனதுதான் மிச்சம். அப்பதான் என் பொண்டாட்டி 'நண்டு ரசம் வச்சி சாப்பிட்டா ...சரியாபோயிடும்ன்னா'.  ஊராயிருந்தா நாட்டு நண்டு (வயல் நண்டு)  கிடைக்கும்.   இங்க சென்னையில கடற்கரை பிரதேசத்தில் எப்படி கிடைக்கும்.  

நண்பர்கள்ட்ட யோசனை கேட்டதில....கட்டிங்(விஸ்கி)போட்டா சரியாயிடும்ன்னாங்க. கூடுதல் தகவலா  ரம்முல மிளகுதூள் தூவி சாப்பிட்டா இன்னும் சூப்பருன்னாங்க. முதல்லமாதிரி இப்பபெல்லாம் 'ரம்மு' சல்லிசா கிடைக்காததால அந்த யோசனையை கைகழிவிவிட்டு, நண்டு வாங்க போனேன்.   மீன் கடை பாய்(இஸ்லாமிய சகோதரர்)வேற... 'மூக்கடைப்புக்கு நண்டு குழம்பு "பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கும்ன்னார்' கூடவே 'ஹாட்டா வையிங்கோன்னு டிப்ஸ்வேற. 

கடல் நண்ட சுத்தம் செய்து, மேல் ஓட்டை பிரித்து, சதைப் பகுதியை இரண்டு துண்டா ஒடித்து வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் கடாயை(சட்டியை) வைத்து எண்ணை விட்டு வெங்காயம், தக்காளி, பச்சமிளகா, மஞ்சள்தூள், மிளாகா தூள், கருவேப்பில்லை போட்டு வதக்கி நண்டையும் சேர்த்து,  கொஞ்சமா புளி கரைச்சி ஊத்தி கொதிக்க விடவும்.  நன்றாக சுண்டி வரும்போது  தண்ணீர் சேர்க்காமல் மிளகு பூண்டு (தேவைகேற்ப) அரைச்சி குழம்போடு சேர்த்துவிடவும். குழம்பு நல்லா காரம் சாரமா திரண்டு வரும். (தகவல் உபயம் என் மனைவி)    

அதேபோல நண்டு சூப்பும் இதற்கு ஏற்றதுதான்,   நண்டு குழம்பை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சமைப்பார்கள். ஆனால் இந்த முறையில் நண்டு குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்... ஜலதோஷமும் பறந்திடும்.  


சுட சுட சோத்தப் போட்டு...சூடான கொழம்பு ஊத்தி சாப்பிட... சாப்பிட... சும்மா  கண்ணு மூக்கிலயிருந்து 'ஜலம்' தாரை தாரையாக வடியும்.    கொரல்ல இருந்த கரகரப்பு கரைந்து தொண்டை சகஜ நிலமைக்குத் திரும்பும்.  உடம்புல இருந்த வலி போய் ஒரு முறுக்கு(?) ஏறும் பாருங்க அப்பதான் உணருவீங்க நண்டோட மகத்துவத்த. அப்ப கெடைச்ச கேப்புல எழுதியதுதான் இந்தப் பதிவு. 

அப்புறம்..... நண்டு ரசத்துக்கு  இன்னொரு பவரும் உண்டு. அத நான் சொல்லமாட்டேன்!.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக