வெள்ளி, பிப்ரவரி 17, 2012

தொலைத்தவை எத்தனையோ - 6


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
ஒவ்வொருவரும் தமது ஆரம்ப, அரிச்சுவடி ஆசிரியர்களைப் பற்றி விரிவாகக் கூறும் போதும், அவர்கள் பாசம், நேசம் என்று  விமரிசிக்கும் போதும் நான் ஏக்கமடைவேன், கவலையடைவேன்.
ஆறுமுக நாவலர் ஆரம்பித்த பாடசாலை அது. அன்று சுண்ணாம்பு, சீமெந்துச் சுவராலான கட்டிடம். கிடுகு ஓலையால் வேயப்பட்ட கூரையும் கொண்டது. நிலம் மண்ணாலானது. நாங்கள் இருந்து படித்தது வாங்கும் மேசையும் தான். சிலேட் இல்லாதவர்கள் மண்ணை அள்ளி மேசையில் போட்டு ‘அ’ னா எழுத வேண்டும்.
இன்று மகிந்த ராஐபக்ச வந்து சமீபத்தில் திறந்து வைத்த புதுக் கட்டிடத்தோடு கொண்ட பாடசாலை. பழைய கட்டிடம் இருக்கிறதோ தெரியாது. (ஆனால் சுவாமிநாதர் மண்டபம் இருக்கிறதாம்.)
ஐந்து வயதில் பாடசாலையில் அரிவரி வகுப்பில் சேர்ப்பார்கள். எங்கள் பெரியம்மா எங்களைச் (பெரியப்பா வீட்டுப் பிள்ளைகளையும் சேர்த்து) சேர்க்கும் போது  எனக்கு 4 வயதை ஐந்து என்று கூறிச் சேர்த்தார்கள். சேர்த்த பின்பு தங்கள் வீட்டில் வந்து இதைக் கூறிப் பெரியம்மா சிரித்தார்கள். ( அது வேறு விடயம்)
எனது அரிவரி வகுப்பு வாத்தியார் ஊர்ப் பெண்மணி, நன்கு தெரிந்தவர் தான். அவரை நினைத்தால்….
”…ஏய்! இங்கே வா!…உனக்கு எத்தனை தரம் கூறுவது?
    நீ  என்ன செய்கிறாய்?…..”
போன்ற ஒருமை வார்த்தைகளே நினைவிற்கு வரும். 
இதில் தவறில்லை, நல்ல தமிழ் தானே  என்கிறீர்களா?….. சரி தான்.
நாங்கள் பிறந்ததிலிருந்து வாருங்கள், போங்கள், நீங்கள், நாங்கள் என்று மரியாதையாகப் பேசிப் பழகினோம். தெருவில் போகும் தெரியாதவர்களையும் அப்படித் தான் அழைத்துப் பேசுவோம். நாம் அப்படிப் பேசினால் அவர்கள் எம்மை ஒருமாதிரிப் பார்ப்பார்கள், அது வேறு விடயம்.
இங்கு பாடசாலையில் அரிவரி வாத்தியார் இப்படிப் பேசியதே ஒரு வெறுப்புப் போல தெரிந்தது. எனக்குப் பிடிக்கவே இல்லை. 
நீ என்ன செய்கிறாய் என்று என்னைக் கேட்டால் இவ என்ன என்னை நீ என்கிறா என்பது போல பார்ப்பேன். இப்போ நினைத்தாலும் அது தான் நினைவில் வருகிறது. (நீ, வா, போ என்பது தான்.).
நெருக்கமான ஒரு தொடர்பு இருந்ததாக சிறிதும் நினைவே இல்லை.
ஒரு நாள் பாடசாலையில் அழுதபடி நின்றேன். அப்பப்பா(முருகேசு சுவாமிநாதர்) பாடசாலை நிர்வாகி (மானேஐர்) என்பதால் 10மணியளவில் மேற்பார்வைக்காக வந்து காரியாலய (பெரிய வாத்தியார்) அறையில் கையெழுத்துகள் இடுவார்.
பின்பு வகுப்பறைகளைச் சுற்றிப் பார்க்க வரும் போது நான் அழுதபடி நின்றதைக் கண்டார். ஏன் அழுகிறா என்ற போது ” என்னவோ தெரியாது அழுதபடி இருக்கிறா” என்றார் வாத்தியார். ”நான் கூட்டிப் போகிறேன்”  என்று கை பிடித்துக் கூட்டி வந்தார் வீட்டிற்கு.
அப்பப்பா (கண்ணாடியப்பா) கை பிடித்துத் தெருவிலே துள்ளித் துள்ளி நடந்து வந்ததும், என் அழுகை போன இடம் தெரியாததும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது நாலு, நாலரை வயதிருக்கும்.
இன்று அதே போல நான் பிள்ளைகளோடு 14 வருடங்கள் வேலை செய்தேன். அவர்களை ஆதரவாக அணைப்பதும், மடியில் இருத்தி பேசுவதும் என்று எவ்வளவு இனிமையான அனுபவங்கள்.
எதை நான் அன்று இழந்தேனோ அதை இங்கு அவர்களிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன் ஆசை தீர. தொலைத்தவை தான்.
காரை பெயர்ந்த நாவலர் கட்டிடச் சிறு பகுதி காண்கிறீர்கள்.

ஓட்டுக் கூரையிருக்கிறது, முன்பு கிடுகு ஓலை வேய்ந்திருந்தது. இது பக்கத் தோற்றம். பின்னர் கட்டப்பட்ட நாவலர் சிலை இது.


2 கருத்துகள்:

Kanthan, Denmark சொன்னது…

Very good... And great photos. When is taken?

vetha (kovaikkavi) சொன்னது…

அன்புடன் காந்தன், சிவகுமார் யேர்மனி மிக்க நன்றி தங்கள் இருவர் கருத்துகளிற்கும். 2001ல் நாவலர் சிலை, பாடசாலைப் படம் எடுத்தது. நாங்கள் யாழ் போனபோது. மன்னிக்க வேண்டும் பதிலின் தாமதத்திற்கு.- வேதா. இலங்காதிலகம்.24-2-12.

கருத்துரையிடுக