புதன், பிப்ரவரி 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் (285)  

பொருள்: களவாடுவதற்குத் தக்க காலத்தை எதிர்நோக்கி இருப்பவர்களிடம், அருளைக் கருதி அன்புடையவராக இருக்கும் நிலை உண்டாகாது.

அமுத வாக்கு

புத்தர் 

கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்.
தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
கருமியை(கஞ்சனை) ஈகையால்(கொடையால்) வெல்ல வேண்டும்.
பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும்.

இந்தியாவில் வினோத கிராமம்


உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களுக்கு இது நாள் வரை ஓட்டு போட உரிமை அளிக்கப்படாமல் உள்ளது.
 
உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள இந்த தேர்தல் தொடர்பாக பிரசாரம் செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் செருவா கிராமத்தில் பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது. சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்த கிராமத்தில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பெண்களை ஓட்டு போட அனுமதிப்பதில்லை.
 
இந்த வினோத நடவடிக்கை குறித்து கிராம பெரியவர் நசீர் கானிடம் கேட்ட போது மேலும் 

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். (284) 

பொருள்: களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது அகலாத வருத்தத்தை அளிக்கும்.

இன்றைய பழமொழி

இந்தியப் பழமொழி 

பணிவற்ற மனைவி பகைவருக்கு ஈடானவள். அவளால் ஏற்படும் இழப்புகளுக்கும் அளவே கிடையாது.

நாடுகாண் பயணம் - பாரோயே தீவுகள்

தீவுக் கூட்டங்களின் பெயர்:
பாரோயே தீவுகள்(Faroe Islands)
*'பாரோயே தீவுகள்' என்பது ஆங்கில உச்சரிப்பாகும். தமிழில் 'பரோயே தீவுகள்' எனவும் உச்சரிக்கப் படுகிறது. டென்மார்க்கின் தேசிய மொழியாகிய டேனிஷ் மொழியில் 'பெயா ஊயென'(Færeøerne) எனவும், பாரோயே தீவுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றான 'பெயா ஊஸ்க்' மொழியில் 'போரூயர்(Føroyar) எனவும் அழைக்கப் படுகிறது.


அமைவிடம்:
மேற்கு ஐரோப்பாவில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள நோர்வீஜியக் கடலில்/ஸ்கன்டிநேவியாவில் உள்ளது.


ஆட்சி இறைமையைக் கொண்டுள்ள நாடு:
டென்மார்க் 


தீவுகளின் சர்வதேச அரசியல் தகுதி:
டென்மார்க் நாட்டின் கடல் கடந்த ஆட்சிப் பிரதேசம்.


எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் வட அத்திலாந்திக் சமுத்திரம்(நோர்வீஜியக் கடல்), இருப்பினும் கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளாக வட மேற்கில் ஐஸ்லாந்தும், தெற்கில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தும் உள்ளன.


தலைநகரம்:
டோர்ஸ்ஹாவ்ன்(Torshavn)


அலுவலக மொழிகள்: 
பெயாஊஸ்க்(Faroese), டேனிஷ்(டென்மார்க்கின் தேசிய மொழி)


இனங்கள்:
பெயா ஊரர்கள் 91%
டேனிஷ் இனத்தவர்(டென்மார்க் நாட்டு வம்சாவளியினர்) 5,8%
பிரித்தானியர் 0,7% 
ஐஸ்லாந்துக் காரர்கள் 0,4%
நோர்வீஜியர்கள் 0,2%
போலந்து இனத்தவர் 0,2%


அரசாங்க முறை:
சம்பிரதாய பூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி.


நாட்டின் தலைவி:
இரண்டாவது மார்கிரெத(டென்மார்க் அரசி)


டென்மார்க்கின் தூதுவர்/உயர் ஸ்தானிகர்:
டன் எம்.குனுட்சன் (Dan M.Knudsen) *இவர் மேற்படி தீவுகளில் டென்மார்க் அரசியின் பிரதிநிதியாகப் பதவி வகிப்பதுடன், ஒவ்வொரு வருடமும் இத் தீவு மக்களின் வாழக்கை நிலவரம் பற்றி டென்மார்க் பிரதமருக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார். இது 28.02.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


தீவுகளின் பிரதமர்:
காய் லியோ ஜொஹன்னெஸ்சன்(Kaj Leo Johannesen)  *இது 28.02.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


நோர்வேயுடன் இணைக்கப்பட்ட ஆண்டு:
கி.பி.1035


டென்மார்க்குடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட தேதி:
14.01.1814


சுயாட்சி பெற்ற தேதி:
01.04.1948


பரப்பளவு:
1,399 சதுர கிலோ மீட்டர்கள்.


சனத்தொகை:
49,267 (2011 மதிப்பீடு)


நாணயம்:
பாரோயே தீவுகளின் குரோனா (Faroese Krona)
*இது டேனிஷ் நாணயத்திற்கு இணையான பெறுமதி கொண்டதும், டேனிஷ் மத்திய வங்கியால் வெளியிடப் படுவதும் ஆகும்.


இணையத் தளக் குறியீடு:
.fo


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 298


இயற்கை வளங்கள்:
மீன்கள், திமிங்கிலம், நீர் மின்சாரம், சிறிய அளவில் பெற்றோலியம் மற்றும் எரிவாயு.


தீவுகளைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • முழுமையான சுயாட்சி பெற்ற ஆனால் டென்மார்க் இராச்சியத்தின் ஆட்சிக்குள் தங்கியிருக்கும் சுயாட்சிப் பிரதேசம்.
  • இத் தீவுகளுக்கு என ஒரு பாராளுமன்றம்(தீவு மக்களின் மொழியில் 'லொக்டிங்' Logting என அழைக்கப் படுகிறது) உள்ளது. இருப்பினும் இப் பாராளுமன்றம் தீவின் உள்ளக விவகாரங்களில் மட்டுமே முடிவுகள் எடுக்கும் வல்லமை கொண்டது. ஒவ்வொரு தடவையும் டென்மார்க் பாராளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறும்போது இத் தீவுகளின் சார்பாக மொத்தம் 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இத் தீவு மக்களால் தெரிவு செய்யப் படுகின்றனர்.
  • நீதித்துறை(காவல்துறை உட்பட), பாதுகாப்பு, மற்றும் வெளியுறவுத் துறை ஆகியன டென்மார்க் நாட்டின் வசம் உள்ளன. ஏனைய துறைகளில் இத் தீவு மக்களும், அவர்களது பாராளுமன்றமும் சுயமாக முடிவுகளை எடுப்பர்.
  • முழுமையான சுயாட்சிப் பிரதேசமாக இருந்தாலும் டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் இத் தீவிற்கென ஐரோப்பிய ஒன்றியத்தில் தனியான உறுப்புரிமை கிடையாது.
தொடரும் 

திங்கள், பிப்ரவரி 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து 
ஆவது போலக் கெடும். (283)

பொருள்: களவால் வரும் பிறர் செல்வம் பெருகுவது போல் தோன்றி, கடைசியில் உள்ளதையும் சேர்த்து அழித்து விடும்.

இன்றைய பொன்மொழி

புத்தர் 

சொன்ன சொல், விடுபட்ட அம்பு, கடந்துபோன வாழ்க்கை, நழுவ விட்ட சந்தர்ப்பம் ஆகிய நான்கும் மீண்டும் திரும்பி வராது. இக்கணத்தில் நன்றாக வாழ். நல்லவனாக வாழ்.

பல் ஈறுகளில் வலியா?



சிலருக்கு பல் துலக்கும்போது பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசியும். வலியும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனே பல் டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவதுதான் நல்லது.


ஈறுகளிலும் அவற்றின் அடியில் இருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும்.
 
அதனால் பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வரும். சில நேரங்களில் மேலும்  

நிர்வாணம்


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


வாழ்க்கையெனும் மனித நந்தவனத்தில் அன்பு, பாசம், நேசம் என்பவை இதமான தென்றல் போன்றது. மயிலிறகு கொண்டு மனதை வருடி மயங்க வைக்கும் இனிய உணர்வைத் தருகிறது. அன்பு இப்படியானால்…
கோபம் பிரளயமானது, துன்பமானது, வேதனை தருவது.
கோபம் ஒரு செய்தி.
கோபமடையும் போது சொல்வதைக் கேட்கின்றனர். கோபம் உலகத்தின் பெறுமதியையும் அனுபவத்தையும் எடுத்துக் கூறுகிறது. ஆனால் கடும் கோபம் என்ற உணர்வு மிகவும் ஆபத்தானது.
சாதாரண கோபத்தினால் உருவாகும் எரிச்சல் பரவும் தன்மையது. அழிக்கும் திறனுடையது. கோபமடையும் போது மனிதர் தம்முடனான தொடர்பை இழக்கின்றனர். தம்மை மறக்கின்றனர். சூழ்நிலையையும் மறக்கின்றனர். கோபம் கொண்ட மனிதரையும் மறக்கின்றனர்.
அன்பு, நேசம், காதல் மட்டும் உணர்வு பூர்வமான இணைப்பை உலகில் தருவதன்று.
கோபமும் ஒரு தொடர்பு வழி ஆர்வமே. கோபமும் மனிதரை ஒருவருடன் ஒருவரை இணைக்கிறது.
ஒரு குறிக்கோள் கொண்டு தான் கோபம் உருவாகிறது.
நமக்குத் தெரிகிறது, ஏன் எவர் மீது  கோபமடைகிறோம் என்று.
ஒருவருடன் நமக்குக் கோபம் வருவதில்லையானால், அவரது இன்ப துன்பங்களில் பங்கு போட நாம் விரும்பவில்லையெனலாம், அல்லது  அவைகளில் பங்கு பெறும் அக்கறை நமக்கு இல்லை யென்றாகிறது.
மகிழ்ச்சி, அன்பு, ஆதரவு, தேறுதல், புகழ் என்பவையுடன் மட்டுமே நாம் வளர்க்கப் பட்டிருந்தால், நாம் நிதானமற்றவராக, இரக்கமற்றவராக இருப்போம்.
ஒரு எண்ணத்தை பிறர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொண்டு வரவைக்கும் முயற்சி கோபமாகிறது.
மனக் கட்டுப் பாடுடைய கோபம் நீண்ட நேரம் நிலைப்பதில்லை.
கோபம் நம்மைக் காட்டிக் கொடுக்கிறது. நமது எல்லையை அடையாளம் காட்டுகிறது. மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
இவ்வுணர்வை நாம் காட்டாவிடில், திருப்தியின்றி, மனக் கசப்புடன் நாம் நிற்போம். இது மிகச் சிரமமானது. 
 கோபத்தை வெளிப் படுத்த வேண்டும்.
அது கசப்புணர்வாகி,உடலில் முடிச்சுகளாகிப், பெரிதாக வெடித்து கரடு முரடாக முதல், அதை வெளிப் படுத்துதல் ஆறுதலாகிறது.
ஒரு வகையில் கோபமும், காமமும் சமமானது.
மனிதரை அது நிர்வாணமாக்குகிறது.
கோபம் கொள்ளல் மகிழ்வுத்
தீபம் அழிக்கும், பிறர்
சாபம் நிறைத்து- மன
சாந்தி அளிக்கும்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

"ஐ லவ் யூ மம்மி"


வீட்டுக்குள் நுழைந்த தாய்க்கு கோபம் தலைக்கேறியது. ஹால் முழுக்க வண்ண வண்ண காகிதங்கள், ரிப்பங்கள் சிதறி கிடக்கின்றன. எல்லாம் தன் ஆறு வயது மகனுடைய வேலை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குள் மகனே வந்து விட்டான். அம்மா இது உனக்காக நான் செஞ்சது என்று ஒரு அழகான பேட்டியை காட்டினான். என்னடா இது? என கோபமாய் கேட்டால் அம்மா. என்னோட பரிசு, பிரிச்சு பாருங்கம்மா, தாய் பிரித்தாள். உள்ளே மேலும் 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளை 
கள்ளத்தால் களவேம் எனல். (282)

பொருள்: குற்றமான செயல்களை மனத்தால் நினைப்பதும் பாவம்; ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது.

இன்றைய பழமொழி

ஸ்பானியப் பழமொழி 

அன்னையின் அன்பிற்கு வயதே கிடையாது. ஆனால் இதை உணர்ந்து கொள்வதற்குள் நமக்கு வயதாகி விடுகிறது.

தங்க மீன் ரகசியம்!

ஆக்கம்:  வினோ ரூபி, சென்னை இந்தியா 
ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.

அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

ஒமேகா
-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.

இ.பி.ஏ. என்ற வேதிப்பொருள் மூளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ குறைபாடும் ஒரு காரணம். அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.

எனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா
-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெறும்.

நரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெறும் என்பது உண்மை. ஆய்வாளர் நார்மன் சலீம் கூறும் போது, கொழுப்பு கெட்டது என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது ஒமேகா-3. எல்லோரது உணவிலும் டி.எச்.ஏ சீராக கலந்திருப்பது உடல்நலத்துக்கு சிறந்தது என்றார்.

சனி, பிப்ரவரி 25, 2012

நமக்கு நாமே விருது கொடுத்து மகிழலாம்

எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பதிவின் தலைப்பினைப் பார்த்திட்டு பல பேரு உணர்ச்சி வசப்பட்டிருப்பாங்க. எல்லோரும் கூல் டவுண். வெளியே என்ன எழுதி இருக்கு என்று முடிவு பண்ணிக்க முன்னாடி, பதிவினைப் படித்து, பதிவில் என்ன எழுதி இருக்கு என்பதனை படிச்ச பின்னாடி நிச்சயமா உங்களின் கோபம், ஆத்திரம் எல்லாம் காணாமற் போயிடுமுங்க. இப் பதிவானது தனக்கு தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. ஒத்தப் பதிவினூடாக மொத்த ஹிட்சையும் அள்ளுவது எப்படி எனும் தொடரின் ஏழாவது பாகமாக இப் பதிவு உங்களை நாடி வருகின்றது. இப் பதிவின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள மேலும் 

2 கோடி வைர நகைகளுடன் உடல் அடக்கம்


அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி விட்னி ஹீஸ்டன் (47). கடந்த சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல் நியூஜெர்சியில் உள்ள அவரது சொந்த ஊரான நீவார்க்கில் அடக்கம் செய்யப்பட்டது. 

அப்போது அவர் விரும்பி அணியும் கருஞ்சிவப்பு நிற கவுன் உடை அணிவிக்கப்பட்டிருந்தது. அது தவிர அவர் விரும்பி மேலும் 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு (281) 

பொருள்: பிறரிடம் பழிச்சொல் கேட்காமல் உலகில் வாழ விரும்புகிறவன், பிறர் பொருளைக் கவரும் எண்ணம் உள்ளத்தில் தோன்றாதவாறு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

ஒருவர் உன்னை உயர்த்திப் பேசும்போது விழிப்போடு இரு. ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு. எவரேனும் உன்னை அதிகமாய்ப் புகழும்போதும் செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம்.

தாரமும் குருவும் பகுதி - 6.4

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.4 
அல்லைப்பிட்டி 1977

நீங்கள் செய்கின்ற 'பூமித் தாயைச் சூடாக்குகின்ற' கெடுதலான செயலைக் குறைப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உங்கள் கைளில் உள்ளன.நீங்களும் நானும் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்துச் செய்தால் பூமித் தாயை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.
பூமி வெப்பமடைவதால் ஏற்படும் கேடுகளில் 'தீவுகளின் அழிவு' முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என இரண்டு வாரங்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்னுமொரு கேட்டைப் பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தப் பூமியையும், ஏனைய கோள்களாகிய சூரியன், சந்திரன் ஆகியவற்றையும் படைத்த இயற்கை அன்னை இந்தப் பூமியில் வாழப் போகின்ற உயிரினங்களின் நன்மை கருதி, அவைகள் சூரிய வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பூமியில் வாழப் போகும் அத்தனை ஜீவராசிகளுக்காகவும் ஒரு 'குடையை' விரித்து வைத்தாள். என்ன, குடையா? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? ஆம் அதை விஞ்ஞானிகள் 'குடை' என்றுதான் அழைக்கிறார்கள்.


இயற்கை அன்னை தந்த குடை
பூமியின் வயது பல கோடி ஆண்டுகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமி எப்போது உருவாகியது எனபது உங்களுக்கும் எனக்கும் திட்டவட்டமாகத் தெரியாததால் விஞ்ஞானிகளின் கூற்றை மறு பேச்சில்லாமல் ஏற்றுக் கொள்வோம். இந்தப் பூமி உருவாகியபோது இயற்கையானது சூரியனின் கடும் வெப்பம் இந்தப் பூமியை நேரடியாக வந்து தாக்காமல் இருப்பதற்காக ஒரு 'பாதுகாப்பு' ஏற்பாட்டைச் செய்தது. அதன் பெயர் ஓசோன் படலம் அல்லது ஓசோன் படை (Ozone Layer) என்பதாகும். இதன் பணி யாதெனில் சூரியனில் இருந்து புறப்படும் வெப்பக் கதிர்கள் நேரடியாகப் பூமியை வந்தடையா வண்ணம் காப்பது ஆகும். இவ்வாறு சூரியனின் வெப்பக் கதிர்கள் நேரடியாகப் பூமியை வந்தடையுமானால் நாமும் பூமியில் உள்ள ஏனைய உயிரினங்களும், செடி கொடிகளும்,மரங்களும் பொசுங்கி, வெந்து சாக வேண்டிய நிலை ஏற்படும். இதனைக் கருத்திற் கொண்டே இயற்கை அன்னை எமக்காக மேற்படி 'ஓசோன் படலம்' எனும் குடையை விரித்து வைத்தாள். மனிதர்களாகிய நாம் இயற்கை அன்னை எமக்காகப் படைத்தருளிய இந்தப் போற்றுதலுக்குரிய 'குடைக்காக' அவளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவளுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டாமா? ஆனால் இந்த நன்றிகெட்ட மனித இனம் என்ன செய்தது தெரியுமா? இயற்கைத் தாய் எமக்குப் பரிசளித்த அந்தக் குடையின் மீது பல ஓட்டைகளை ஏற்படுத்தி விட்டது. ஆம், பூமியின் பல இடங்களில் மேற்படி ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் மேற்படி ஓட்டை விழுந்த பகுதியில் உள்ள நாடுகளில் சூரிய ஒளி+வெப்பம் மக்களை நேரடியாகத் தாக்குகிறது. இதனால் அவர்கள் வெந்து மடிவது மட்டுமன்றி, அவர்களின் தோலைச் சூரிய வெப்பம் மற்றும் ஊதாக் கதிர்கள் தாக்குவதால் அவர்கள் 'தோல் புற்று நோய்க்கும்' ஆளாகின்றனர்.


யார் காரணம்?
விஞ்ஞானிகளைக் கேட்டால் "நாம் அனைவருமே காரணம்" என்கின்றனர். ஆனால் குறிப்பிட்டுச் சொன்னால், எந்தெந்த நாடுகளில் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் உள்ளனவோ, எந்தெந்த நாடுகளில் வாகனங்கள் அதிகமோ அத்தனை நாடுகளும் இந்த இயற்கைச் சீரழிவுக்குப் பொறுப்பு ஆகின்றனர். ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுவதற்கு பூமில் ஏற்படும் வெப்பம் ஒரு காரணமாக இருந்தாலும், பூமியில் இருந்து மேலெழுந்து செல்லும் 'கரி அமில வாயு'(Carbon Dioxide) பிரதான காரணமாக அமைகிறது. ஆகவே கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் நாடுகள் இதற்குப் பொறுப்பாகின்றன. அது மாத்திரமன்றி சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் அனைவருமே இந்த இயற்கையை அழிக்கும் செயலுக்குத் துணை போகின்றனர். புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற வாசகர்களில் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் உங்கள் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக ஒப்படைத்து, அதனைத் திரும்பப் பெறும்போது செலுத்தும் கட்டணமாக இருந்தாலென்ன, உங்கள் வாகனங்களிற்கு புதிய உதிரிப் பாகங்கள்(டயர் உட்பட) பொருத்தும்போது செலுத்தும் கட்டணமாக இருந்தாலென்ன நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் 10% வரை(environmental charge) இந்த இயற்கையை, பூமித் தாயைச் சேதப்படுத்தியமைக்காகச் செலுத்தும் 'தண்டத் தொகை'(குற்றப் பணம்) என்பதை அறிவீர்களா?
இந்த ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டை விடயத்தில் இன்னுமொரு விசித்திரம் கலந்திருக்கிறது. நீங்கள் வெளியேற்றும் கரியமில வாயு உங்கள் நாட்டின் மேல் உள்ள ஓசோன் 'குடையில்' ஓட்டையை ஏற்படுத்தாது. மாறாக பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் நாடுகளின் மேல் உள்ள ஓசோன் படலத்தின் மீது ஓட்டையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக சீனாவின் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை,கரியமில வாயு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு மேலே உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகிறது. ஐரோப்பியத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு தென் அமெரிக்க நாடுகளாகிய பிரேசில், ஆர்ஜென்டீனா, சிலி ஆகிய நாடுகளின் மேல் காணப்படும் ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. யாரோ செய்த பழிக்கு யாரோ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கை அன்னையின் வித்தியாசமான தீர்ப்பாகத் தோன்றுகிறதா?
இயற்கையை சீரழிக்கும் பல எதிரிகளில் முதன்மையான காரணிகளைப் பார்த்து வருகிறோம். இவற்றில் அடுத்த நூற்றாண்டில் மிகப் பெரிய சவாலாகத் திகழப் போவது 'பிளாஸ்டிக்' ஆகும். இன்று மனிதனின் நாளாந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்ட, நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு சக்தியாக விளங்கும் இந்தப் பிளாஸ்டிக் நாளை எமது இயற்கை அன்னையை அழித்தொழிக்கப்  புறப்பட்டிருக்கும் ஒரு 'புதிய எதிரி' என்பது அறிவீர்களா?


பிளாஸ்டிக் என்றால் என்ன?
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்கள் தொடக்கம், கைத்தொலைபேசி, கணணி, வாகன உதிரிப் பாகம் வரை ஆயிரக் கணக்கான பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. சரி, நீட்டி முழக்காமல் விடயத்திற்கு வருகிறேன். 'பிளாஸ்டிக்' என்பதே பெற்றோலியம் மற்றும் ரப்பர்க் கழிவுகளின் 'கூட்டமைப்பு' ஆகும். பெரும்பாலான மென்மையான பிளாஸ்டிக் கலவைகள் மற்றும் மூலப் பொருட்கள் யாவுமே பெற்றோலியக் கழிவிலிருந்து உருவாக்கப் படுகின்றது.


உங்களை விட ஆயுசு கெட்டி.
இந்தப் பூமியை அழித்தொழிக்கக் காத்திருக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் நம்மை விட ஆயுள் கூடியவை என்பது நீங்கள் அறிந்தது. ஒழுங்கான முறையில் அகற்றப் படாமல் மண்ணில் வீசப்படும் ஒவ்வொரு பொருளும் மண்ணில் சிதைவடைந்து மண்ணோடு மண்ணாக உக்கிப் போவதற்கு/மட்கிப் போவதற்கு எடுக்கும் காலப் பகுதியை கீழே உள்ள பட்டியலில் காண்க.
  1. வாழைப்பழத் தோல் மற்றும் தோடம் பழத்(ஆரஞ்சுப் பழம்) தோல்: 3 தொடக்கம் 6 வாரங்கள் 
  2. காகிதத்தால்(பேப்பர்) தயாரிக்கப் பட்ட பை மற்றும் செய்தித் தாள்(News Paper): 4 தொடக்கம் 6 வாரங்கள் 
  3. அட்டைப் பெட்டி(Hard Board): 8 வாரங்கள் 
  4. கம்பளிக் காலுறை(Socks): 1 வருடம் 
  5. சிகரெட்டின் பின்பகுதியில் இருக்கும் பஞ்சு (filter): 1 தொடக்கம் 50 வருடங்கள்.
  6. கடையில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகள்: 20 தொடக்கம் 100 வருடங்கள்.
  7. தகரத்தால்(tin) செய்யப்பட்ட குளிர்பான, மதுபான டின்கள்: 50 வருடங்கள்.
  8. அலுமினியத்தால் தயாரிக்கப் பட்ட குளிர்பான மற்றும் மதுபான டின்கள்: 200 தொடக்கம் 500 வருடங்கள்.
  9. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குளிர்பானப் பாட்டில்கள்(போத்தல்கள்): 450 வருடங்கள் மற்றும் அவற்றின் மூடிகள் 800 வருடங்கள் வரை.
  10. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பாட்டில்கள்: 450 தொடக்கம் 1000 வருடங்கள்.
  11. குழந்தைகளின் கழிவு வெளியேற்றத்திற்குப் பயன்படுத்தப் படும் சுகாதார நப்கின்கள் (Diapers): 550 வருடங்கள்.
  12. பிளாஸ்டிக்கினால் ஆன தேநீர்க் கோப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள்: 100,0000(பத்து லட்சம்) ஆண்டுகள்.
  13. தமிழ் மக்கள் 'ரெஜி போம்' என அழைக்கும் styrofoam பஞ்சு: 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல்.
  14. கண்ணாடிகள், கண்ணாடியால் ஆன பாத்திரங்கள், கண்ணாடிப் பாட்டில்கள்: 10 லட்சம் தொடக்கம் 20 லட்சம் ஆண்டுகள் வரை.

தகவலுக்கு நன்றி: Be healthyandrelax.com 

நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் எத்தனை நூற்றாண்டுகள் நின்று நிலைத்து இந்தப் பூமியை அழிக்க இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் சிந்திப்போம்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் 
பழித்தது ஒழித்து விடின். (280)

பொருள்: உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டு விட்டால், மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக் கோலங்கள் வேண்டாம். 

அமுத வாக்கு

திருமுருக கிருபானந்த வாரியார் 

இறைவன் நமக்குப் புரிவது அனைத்துமே அருள்தான். நமது அறியாமையால் சில சமயங்களில் அது நமக்குத் துன்பம்போல் தெரிகிறது.

சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை


சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்:

1.
அதாவது இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் 'முதுமை'  அடைந்துவிடுவீர்கள்.

2.
மூச்சு விடாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள்.

3.
குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.

4.
இடது கையால் உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஏன் என்றால், ஷைத்தான் அப்படித்தான் செய்யும்.

5.
உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவரை உணவை தர்மம் பண்ணுங்கள்.

6.
வயிறு நிறைய சாப்பிட்டீர்களானால், இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

7.
இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமும் இறைச்சியை உண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.

நன்றி: ithayapoomi.org

ஆன்மீகம் - 7


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

திட்டமான தேவ உதயம்


தேவாலயமணி ஓசைகள்

தேவகீத இசைவில்,
தேவதைகள் பூச்சொரிய
தேவபாலன் உதிக்கிறார்.

தேய்ந்தவரை ஆதரித்து

தேவ நற்கருணை தர,
தேவ நன்நாளிலே
தேவ கிருபை நிறைகிறது.

ரிய பாக்கியமிதுவே

மரியாள் மைந்தன்
தரிசனமே, மகிழ்வு
விரிய வைக்கிறது.

போதுமெனும் வரையில்

புண்ணிய தினத்திலே
போற்றுவோ மவன் கருணை.
பொக்கிசமான தேவகருணை.

மாட்டுத் தொழுவத்தில்

காட்டிய அற்புதம்
திட்டமான தேவ உதயம்,
ஒளிவட்டமானது உலகில்.

வியாழன், பிப்ரவரி 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் குஅன்ன 
வினைபடு பாலால் கொளல். (279)

பொருள்: நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு இன்னிசை தரக்கூடியது. ஆகவே, மக்களின் பண்புகளைச் செயல்வகையால் அறிதல் வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

ஜான் பன்யன் 

சந்தேகம் என்றொரு கோட்டையின் தூண்களே அதிருப்தியும், அவ நம்பிக்கையும்.

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்!


ஆக்கம்:செ.சஞ்சயன் , நோர்வே . 
வயதுக்கு வராதவர்களை கட்டாயமாக வெளியேறும் படி மிகுந்த கண்டிப்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்..

சில நாட்களுக்கு முன் நடந்த கதை இது. கணணி திருத்த அழைத்தார் என்னை.
நானும் தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல கடும் குளிரில் அவர் வீடு தேடிப்போய் கணணி திருத்தி வீடு திரும்பினேன். அன்றிரவு மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இப்பவும் கணணிப் பிரச்சனை என்ற போது நான் சூடாகத் தொடங்கியிருந்தேன். அய்யா! இப்போ தானே திருத்தித் தந்தேன் என்றேன். "ஆம் நீ போன பின் அது வேலை செய்யவில்லை" என்றார். யோசித்துப் பார்த்தேன்.. அவருக்கு பிரச்சனையை விளக்கிக் கூறத் தெரியவில்லை. ஆண்டவனும் எனக்கு ஞானக்ககண்ணை இன்னும் தரவில்லை. எனவே அவரின் பிரச்சனை அடுத்த நாள் வரை தீர்க்கப்படாமல் போனது.

மறுநாள் மீண்டும் கடும் குளிரில் நனைந்தபடியே அவரிடம் போய் பிரச்சனையைச் சொல்லுங்களய்யா என்றேன். பிரச்சனையை விளக்கினார். பிரச்சனை விளங்கியதும் நான் சொன்ன மாதிரி நீங்கள் செய்யவில்லையே என்றேன். நீ என்ன சொன்னாய்?, எப்ப சொன்னாய்? என்றார். எனது காதுக்குள் நம்ம வடிவேல் அண்ணண் ”ஆகா” சொல்வது போலிருந்தது.

இப்பொழுது நான் அவரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவருக்கு வயது 80ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. கண்பார்வை சற்று மங்கல். வீடு முழுவதும் அழகிய வடிவங்களில் மதுபான போத்தல்கள் இருந்தன. அவற்றை விட அதிகளவில் பழங்காலத்து பொருட்கள் பலவற்றைக் கொண்டு அவரின் வீட்டை அலங்கரித்திருந்தார். அவர் என்னிலும் அகலமாயும், பாரமாயுமும், நிறைமாத கர்ப்பிணியின் வயிறு போன்ற அல்லது அதைவிட சற்று பெரிய வண்டியுடனும்(தொப்பை) இருந்தார்.

மனிதரின் நகைச்சுவைகள் ரசிக்கத்தக்கதாக இருந்தன. ”ஏ” ஜோக்குகளுக்கும் குறைவிருக்கவில்லை. வயதுக்கும் அவரின் மனதுக்கும் சம்பந்தமில்லாதது போல இருந்தது எனக்கு. தனது தற்போதைய காதலிகளைப் பற்றி கண்ணடித்துக் கதைத்தார். என்னைப் பார்த்து உனக்கு காதலி இருக்கிறாளா? என்ற போது பயந்து போய் தலையை தேவைக்கு அதிகமான வேகத்துடன் ஆட்டினேன்.  திருமணமாகிவிட்டதா என்றார். ஆம் என்றேன். தன் வாழ்க்கையில் விடாத பிழை அது ஒன்றுதான் என்று சொல்லியபடியே  சிரித்தார். நான் மௌனித்திருந்தேன்.

அவருக்கு மீண்டும் கணணியை எப்படி இயக்குவது என்று சொல்லிக்கொடுத்த பின் வீடு நோக்கிப் புறப்பட்டேன். அவரின் வீட்டின் அருகில் இருந்த பஸ் தரிப்பிடத்திற்கு நான் வந்த சேர முதலே மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இப்பவும் "நீ போன பின், நீ போன பின் அது வேலை செய்யவில்லை" என்றார். எனக்கு வாயில் நல்ல நல்ல வார்த்தைகள் வந்த போயின. காதுக்குள் இருந்து ஆவி பறந்தது. வயோதிபர் என்பதால் அடக்கி வாசித்தேன். "சரி வருகிறேன்" என்று மீண்டும் அங்கு போய் "என்ன பிரச்சனை? என்றேன். அதே பிரச்சனையை மீண்டும் கூறியபோது எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.

அவருக்கு விளங்கும் முறையில் மீண்டும் ஒரு தரம் விளக்கிக் கூறிய அதேவேளை, படங்கள் மூலம் விளக்கும் ஒரு ஆவணத்தைத் தயாரித்து அதை print எடுத்துக் கொடுத்தேன். மகிழ்ந்து போனார் மனிதர்.

தொலைக்காட்சியில் பனிச்சறுக்கு உலகக்கிண்ணப் போட்டிகள் நோர்வேயில் நடந்து கொண்டிருப்பதை காட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் நானும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். "வா.. வா வந்திருந்து பார். இப் போட்டி முடிந்த பின் நீ வீடு போகலாம், அது வரை நீ எனது விருந்தினன்" என்றார். நானும் விருந்தினனாக மாறிக்கொண்‌டேன்.

"குடிக்க ஏதும் வேண்டுமா? என்றார். 'தண்ணீர்' என்றேன். தந்தார். அவர் கையில் மதுக்கிண்ணத்துடன் வந்தமர்ந்து கொண்டார்.

பேசிக்கொண்டிருந்தோம்.  "இந்தப் பெரிய வீட்டில் தனியாகவா இருக்கிறீர்கள்? என்றேன். "குழந்தைகள், உறவினர்கள் இல்லையா? என்றேன். "நான் தனிக்காட்டு ராஜா" என்று சொல்லிச் சிரித்தார்.

பின்பு அவரே, "கடந்த ஆண்டு வரை எனக்கு குழந்தைகள் இருக்கவில்லை, இப்போது ஒரு மகன் இருக்கிறார்" என்றார். நான் உண்மையிலேயே ஆடிப்போய்விட்டேன். "என்னடா இது?.. "அவர் நடக்கவே முடியாத அளவுக்கு இருக்கிறார்.. இவருக்கு எப்படி குழந்தை? என்று மண்டையை உடைத்தாலும்.. "குழந்தை பெறுவதற்கு உங்கள் வயது கொஞ்சம் அதிகமில்லையா? என்றேன். அவரும் "ஏன் என் வயதுக்கும், அழகுக்கும் என்ன குறை? என்று சொல்லி மேலும் என்னைக் குழப்பி ஒரு ‌மோசமான ”ஏ” ‌ஜோக்கும் அடித்தார்

பின்பு சிரித்தபடியே "எனது குழந்தைக்கு 55 வயதாகிறது" என்ற ‌போது "உங்களுக்குத் தானே குழந்தைகள் இல்லை என்றீர்களே? என்று மடக்கினேன் அவரை. "ஆம் கடந்த ஆண்டு வரை எனக்கு குழந்தைகள் இருப்பது எனக்குத் தெரியாது", ஆனால் திடீர் என்று ஒரு நாள் ஒரு பாதிரியாரிடம் இருந்து வந்த ஒரு கடிதத்தில் உங்கள் குழந்தை உங்களை சந்திக்கவிரும்புவதாக எழுதியிருந்ததாகவும் அதன் பின்பு தான் "குழந்தை" எனப்படும் தனது மகனைச் சந்திக்க அனுமதி வழங்கியதாகவும் சொன்னார்.

அவரின் மகன் வந்த போது ஒரு அழகிய வயதான பெண்மணியையும் அழைத்து வந்ததாயும். அப்பெண் தன்னைத் தெரிகிறதா என்று கேட்டபோது இவர் இல்லை என்றிருக்கிறார். "ஒரு நாள் என்னுடன் படுத்த உனக்கு எங்கே என்னை ஞாபகம் இருக்கும்? என்றாராம் அந்தப் ‌பெண்மணி. அப்போது தான் புரிந்ததாம் அவர் 'தீராத விளையாட்டுப்பிள்ளையாக' விளையாடித்திரிந்த காலத்தின் கோலம் தான் இந்த 'மகன்' என்று.

இப்போ என்னைப் பார்த்துக் கேட்டார்.. "இவை ஏறத்தாள 50 - 55 வருடங்களுக்கு முன் முறுக்கேறியிருந்த காலத்து விளையாட்டுக்கள். இவை யாருக்காவது ஞாபகம் இருக்குமா? என்று.. நான் யதார்த்தமாய் "இருக்கமுடியாது தான்" என்று இழுத்தேன்.  அது ஒரு ”பொற்காலம்” எத்தனை எத்தனை அழகிகள் என் பின்னால் அலைந்தார்கள்...  ம்..ம் என்று பெருமூச்செறிந்தார்.

இப்படி எத்தனை குழந்தைகள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றேன்? "யாருக்குத் தெரியும்? என்றார்..  மிகவும் கூலாக. அத்துடன் தானும் மகனும் DNA பரிசோதனை மூலம் தான் தான் தகப்பன் என்பதை உறுதி செய்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.

அந்தக் காலத்தில் ”பாதுகாப்பு”ச் சாதனங்கள் கிடைப்பது கடினம். அது தான் இப்படியாகிவிட்டது என்றும் ஆனால் அதுவும் நல்லதற்கே என்றும்., பின்பு அவரே.. இந்த வயோதிபக் காலத்தில் ”மகன்” என்று உரிமையுடன் பழக ஒருவர் கிடைத்திருப்பது தனது மனதுக்கு இதமாக இருகிறதென்றார்..

"55 வருடங்களின் பின் உன்னை உனது குழந்தை தேடிவருகிறது என்றால் அதை விதி என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது? என்றாரு தத்துவத்தையும் உதிர்த்து... மீண்டும் மதுக்கிண்ணத்தை நிரப்பிக்கொண்டார்.

விடைபெற்று வீடு வந்தேன். வரும் வழியெல்லாம் அவர் மீண்டும் என்னை உதவிக்கழைப்பாரோ என்று  பயந்துகொண்டிந்தேன். அவர் அழைக்கவில்லை. இன்று அழைத்தார். என்னய்யா பிரச்சனை என்றேன்?. பிரச்சனையை விளக்கினார். நான் கூறிய விதத்தில் பிரச்சனையை தொலைபேசியினூடாக தீர்த்துக்கொண்டார்.

"இன்று மாலையுணவருந்துவதற்கு எனது மகன் அழைத்திருக்கிறான், அங்கு போகவேண்டும்" என்று துள்ளல் கலந்த குரலில் சொன்னார். "உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன்" என்றேன். சிரித்தபடியே விடைபெற்றார்.

இன்றைய நாளும் நல்லதே.