புதன், நவம்பர் 30, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க; நோய்ப்பால 
தன்னை அடல்வேண்டா தான் (206)  

பொருள்: துன்பம் தருவன பின்பு தன்னை வந்தடைந்து வருத்துதலை விரும்பாதவன் தான் மற்றவர்க்குத் தீமை தரும் செயல்களைச் செய்தல் கூடாது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக் கொள்.

செவ்வாய், நவம்பர் 29, 2011

நாடுகாண் பயணம் - வட கொரியா



நாட்டின் பெயர்:
வட கொரியா (North korea)


வேறு பெயர்கள்:
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic People's Republic of Korea)


அமைவிடம்:
கிழக்கு ஆசியா / கொரிய தீபகற்பம்


எல்லைகள்:
வடக்கு - சீனா மற்றும் ரஷ்யா 
தெற்கு - தென் கொரியாவின் சூனியப் பிரதேசம் *(சூனியப் பிரதேசம் என்பது இரண்டு நாடுகளுக்கிடையில் எழுத்து மூலமோ அல்லது எழுதப் படாமலோ ஒரு உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட, மனித நடமாட்டம் அற்ற, இராணுவக் காவலரண்கள், படையினர் இல்லாத பிரதேசம் ஆகும். இவ் எல்லை மீறப்பட்டால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் என்பது நீங்கள் அறிந்ததே.
மேற்கு - மஞ்சட் கடல் மற்றும் கொரிய நீரிணை.
கிழக்கு - ஜப்பானியக் கடல் 


தலைநகரம்:
பியொங்யாங் (Pyongyang) 


இனங்கள்:
கொரிய இனம் எனும் ஒரே ஒரு இனம் மட்டுமே.


மொழிகள்:
கொரிய மொழி எனும் ஒரே ஒரு மொழி மட்டுமே. 


சமயங்கள்:
புத்த சமயம் மற்றும் சிறிய அளவில் கிறீஸ்தவம். அரசு எந்த மதத்தையும் ஆதரிக்காததாலும், சமய நடவடிக்கைகளில் மக்கள் ஆர்வம் காட்டாததாலும் நாட்டு மக்களில் பெரும் பகுதியினரை 'நாத்திகர்' என கூற முடியும்.


கல்வியறிவு:
99% (உலகிலேயே கல்வியறிவு கூடிய நாடுகளில் ஒன்று. அது மாத்திரமன்றி இந்நாட்டில் ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் 12 ஆவது வகுப்பு வரை கண்டிப்பாகக் கல்வி கற்க வேண்டும்)


ஆயுட்காலம்:
ஆண்கள் 65 வருடங்கள் 
பெண்கள் 72 வருடங்கள் 


ஆட்சி முறை:
ஒற்றை ஆட்சி மற்றும் ஒரு கட்சி ஆட்சி முறை.


நிரந்தர ஜனாதிபதி:
இரண்டாவது கிம் சுங் (Kim II Sung)


தேசியத் தலைவர்:
கிம் ஜொங் இல் (Kim Jong il)


பிரதமர்:
சோ ஜொங் ரிம் (Cho yong-rim)*இது 29.11.2011 அன்று உள்ள நிலவரமாகும்.


ஜப்பானிடமிருந்து விடுதலை:
09.09.1948


பரப்பளவு:
120,540 சதுர கிலோ மீட்டர்கள் 


சனத்தொகை:
24,051,218 (2009 மதிப்பீடு)


நாணயம்:
வட கொரிய வொன்(North Korean Won / KPW)


இணையத் தளக் குறியீடு:
.kp


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 850


விவசாய உற்பத்திகள்:
அரிசி, சோளம், உருளைக் கிழங்கு, சோயா அவரை, தானியங்கள், பன்றி இறைச்சி, முட்டை.


தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
இராணுவத் தளபாடங்கள் உற்பத்தி, இயந்திரங்கள், மின்சார உற்பத்தி, இரசாயனப் பொருட்கள், சுரங்கத் தொழில்கள்(நிலக்கரி, இரும்பு, ஈயம்,சுண்ணாம்புக்கல், கிராபைட், செப்பு, ஸின்க், உருக்கு, மற்றும் மதிப்பு வாய்ந்த உலோகங்கள்), துணிகள், உணவு உற்பத்தி.


ஏற்றுமதிகள்:
கனிய வளங்கள், உலோகங்கள், ஆயுதங்கள், இராணுவத் தளபாடங்கள், துணிகள், விவசாய உற்பத்திகள், மீன்பிடி உற்பத்திகள்.


ஒவ்வொரு வாசகரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய வட கொரியா பற்றிய சில குறிப்புகள்:

  • உலக நாடுகளின் தொடர்புகளில் இருந்து மிகப்பெரும் அளவில் தன்னைத் துண்டித்துக் கொண்டு / தனிமைப்பட்டு இருக்கும் நாடு இது.
  • உலக நாடுகளில் வட கொரியர்களை சுற்றுலாப் பயணிகளாக காண்பது அரிது.
  • வட கொரியாவிலிருந்து வெளி நாடுகளுக்குக் கடிதங்களோ, தொலைபேசி அழைப்புகளோ வருவது அபூர்வம். அண்மைக் காலம்வரை கைத் தொலைபேசி இந்நாட்டில் தடை செய்யப் பட்டிருந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் அது தளர்த்தப் பட்டது.
  • இந்நாட்டில் 12 பத்திரிகைகளும், 20 சஞ்சிகைகளும் வெளியாகின்றன ஆனால் அனைத்தும் அரசின் கட்டுப் பாட்டில் இயங்குகின்றன. இங்கு ஊடகச் சுதந்திரம் என்பது கிடையாது. வேறு நாடுகளின் வானொலியைக் கேட்டல், வேறு நாட்டுப் பத்திரிகையை வாசித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். மேற்படி தவறைச் செய்தமைக்காக சுமார் 50,000 பொதுமக்கள் வரையானோர் சிறையில் தள்ளப் பட்டுள்ளனர்.
  • அரசின் சட்டங்களை மீறியமைக்காக சுமார் 200,000 பேர் வரையானோர் சிறையில் வாடுகின்றனர்.
  • வட கொரியாவிற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவது மிகவும் குறைவு. அவ்வாறு வந்தாலும் ஒவ்வொரு பயணியும் ஒரு 'வழிகாட்டியுடன்' சேர்ந்தே நாட்டைச் சுற்றி பார்க்க அனுமதிக்கப் படுவார்.அவ் 'வழிகாட்டி' ஒரு இராணுவ வீரராக இருப்பார்.
  • வட கொரியாவிற்கு என்று ஒரு நாணயம் இருந்தாலும் அதனை வெளி உலகில் காணபது அரிதாகும்.
  • இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் நமது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் பணம் இல்லை என்றோ, வசதிக் குறைவு என்றோ நாம் வருந்த மாட்டோம்.
  • அரசு உலக நாடுகளுக்குப் போட்டியாக 'அணு ஆயுதம்' தயாரித்தபடி இருக்க மக்கள் வறுமை, நோய்கள், போஷாக்குக் குறைவு போன்றவற்றால் துன்பப் படுகின்றனர்.
  • பல்லாயிரக் கணக்கான மக்கள் மலேரியா, காசநோய், மஞ்சட் காமலை போன்ற நோய்களால் அவதியுறுகின்றனர்.
  • நாட்டிலுள்ள குழந்தைகளில் 60% பேர் போஷாக்குக் குறைவால் துன்புறுவதாக தொண்டு நிறுவனமொன்றின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
  • கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை இந்நாடு கடைப் பிடிப்பதால் எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கை கடைப் பிடிக்கப் படுகிறது. இதில் உள்ள சிக்கல் யாதெனில் நாட்டின் குடிமகன் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்திற்கு மேல் உழைக்க வேண்டும். ஆனால் அவருக்கு சம்பளம் கிடையாது. பணம் என்றால் என்னவென்றே தெரியாத மக்களும் இந்நாட்டில் வாழ்கின்றனர். மக்களின் உணவு, உடை, உறையுள்(வீடு) தேவையை அரசு பூர்த்தி செய்கிறது.
  • குடி மகன் குடியிருக்கும் வீடு அவருக்குச் சொந்தமானது அல்ல, அவர் வீட்டு வாடகையும் செலுத்தத் தேவை இல்லை. வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் அவர் கண்டிப்பாக உழைக்கக் வேண்டும். விதை, உரம் போன்றவற்றை அரசு கொடுத்து உதவும். அதே போல் அறுவடையில் கிடைக்கும் விளைச்சலையும் அரசு எடுத்துச் செல்லும். இந்நாட்டின் ஒரு சராசரிக் குடிமகனின் மாதாந்த வருமானம் வெறும் 2 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • இந்நாட்டிற்கான வெளிநாடுகளின் தூதரகங்களில் பெரும்பாலானவை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இயங்குகின்றன.
  • உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு.நாட்டின் மொத்தப் படைபலம் 12 லட்சம் படைவீரர்கள் எனக் கருதப் படுகிறது.
  • ஒவ்வொரு 25 பொதுமகனுக்கும் ஒரு இராணுவ வீரர் எனும் அடிப்படையில் இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு.
  • இந்நாட்டிடம் சுமாராக இரண்டாயிரம் குண்டு வீச்சு விமானங்களும், ஆயிரத்திற்கு மேற்பட்ட போர்க் கப்பல்களும் உள்ளதாக உறுதிப் படுத்த முடியாத மதிப்பீடுகள் தெரிவிகின்றன.
  • உலகின் பெரும்பாலான நாடுகள் வட கொரியாவுடன் ஏற்றுமதி, இறக்குமதித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. சீனா, ரஷ்யா போன்ற ஒரு சில நாடுகளே வர்த்தகத் தொடர்புகளைப் பேணி வருகின்றன.
  • வருடத்தில் சுமாராக 37 நாட்கள் ஐரோப்பாவைப் போல பனிப் பொழிவும், கடும் குளிரும் நிலவும் இந்நாட்டில் குளிரைப் போக்குவதற்கு ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகளைப் போல் வீட்டைச் சூடாக்கும் 'பொறிமுறை' இல்லாத காரணத்தால் மக்கள் வருடத்தில் 37 நாட்கள் கடும் குளிரில் வாடுகின்றனர்.

திங்கள், நவம்பர் 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இலன்என்று தீயவை செய்யற்க; செய்யின் 
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. (205)

பொருள்: 'யான் வறியவன்' என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக் கூடாது. செய்தால் பொருள் உடையவன் ஆகாது, முன்னிலும் வறியவனாகித் துன்புறுவான்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

மனிதன் குறை உடையவன் மட்டுமல்ல, குறை காண்பவனும் ஆவான். பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன். தன் குறையைக் காண்பவனே முழு மனிதன் ஆவான்.

வாழ்வியல் குறள் - 17


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

புகழ்

ல்ல வாழ்வு, நடத்தை, செயல்களே
ஒருவனிற்குப் புகழ் தருபவை.

குதியானவரைப் பற்றி உண்மையாய், இனிமையாய்
உரைத்தல் புகழ் ஆகும்.

கெட்ட செயல் செய்து  ஒருவன்
எட்டும் பெயர் புகழல்ல.

கேட்டுப் பெறுவதல்ல புகழ், தானாக
நாட்டுவதே புகழெனும் பெருமை.

சாதனையாளரைப் பலர் மத்தியில் புகழ்!
வேதனையதை மனதில் அடக்குதல்.

ளி கொண்ட கைதட்டல், சபையில்
மொழியற்ற புகழ் அங்கீகாரம்.

புகழ்வதில் கஞ்சம் தேவையில்லை. ஒருவனை
இகழ்வதில்  வெகு கஞ்சத்தனமாகு!

புகழை இன்று பணத்திற்கு வாங்குவது
இகழ்வான செயலாகிப் போச்சு.

புகழ் ஒரு போதை. அதை 
அகழ்ந்து புதைப்பதும் வாதை.

புகழோடு பிறப்பவனும் உண்டு. முனைந்து
புகழைத் தேடுபவனும் உண்டு.


ஞாயிறு, நவம்பர் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் 
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)

பொருள்: பிறனுக்குத் தீங்கு தரும் செயல்களை மறந்தும் நினைக்கக் கூடாது. நினைத்தால் அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறம் நினைக்கும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பிறர் துன்பத்தில் பங்குகொள் உனது துன்பம் அர்த்தமற்றுப் போகும்.
பிறர் இன்பத்திற்குக் காரணமாயிரு உனது வாழ்வே அர்த்தமாகும். 

சனி, நவம்பர் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல் (203) 

பொருள்: தமக்குத் தீங்கு செய்தவருக்கும் தாம் பதிலுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தலை அறிவினுள் எல்லாம் தலைசிறந்த அறிவு என்று கூறுவர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வன்முறை இல்லாமல் கொல்லும் அழகான ஆயுதம் அன்பானவர்களின் மௌனம்.

தாரமும் குருவும் பகுதி - 5.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 5.3
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

முதல் நாள் ஒரு சிறுமியையும், சிறுவனையும் சேர்த்து ஒரு ஜோடி எனும் விகிதத்தில் பாட வைத்த 'கமலினி டீச்சர்' அடுத்த நாள் ஒவ்வொருவரையும் வீட்டிலிருந்து வரும்போது ஒரு 'பொம்மை'(பாவைப் பிள்ளை என இலங்கைத் தமிழில் கூறுவோம்) எடுத்து வருமாறு கூறினார். என்று கடந்த இரு வாரங்களுக்கு முந்திய இத்தொடரின் பாலர் வகுப்புப் பற்றிய பகுதியை முடித்திருந்தேன். இவ்வாறு அவர் மாணவர்களிடம் பொம்மை எடுத்து வரும்படி கேட்டதில் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தவர்கள் பெண் பிள்ளைகள் மட்டுமே. ஏனெனில் வீட்டில் விளையாட்டில் பொம்மையை உபயோகிப்பவர்கள் அவர்கள்தானே?. தமிழ் சமுதாயத்தில் மட்டுமன்றி, ஐரோப்பியர்களிடமும் ஒரு எழுதப்படாத 'விதி' இருக்கிறது "விளையாட்டில் பொம்மையை உபயோகிப்பது பெண் பிள்ளைகள் மட்டுமே" என்பதுதான் அந்த விதி. ஆண் பிள்ளைகள் என்றால் கனரக வாகனங்கள் தொடங்கி கனரக ஆயுதங்கள் வரையான விளையாட்டுப் பொருட்கள் உபயோகிக்க வேண்டுமாம்.!!! இவ்வாறுதான் இன்ன இன்ன விளையாட்டுப் பொருளை வைத்துத்தான் விளையாட வேண்டும் என்று எங்காவது சட்டம் எழுதப் பட்டிருக்கிறதா என்ன?
சரி, பொம்மை கொண்டுவரும்படி டீச்சர் பணித்து விட்டார். நாங்களும் மறு பேச்சில்லாமல் சம்மதித்து விட்டோம். ஆனாலும் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டு இருக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. பொம்மைக்கு எங்கே போவது? நான் பொம்மை வைத்து விளையாடியதும் இல்லை. பொம்மையை அயல் வீடுகளில் கண்டதும் இல்லை. பாலர் வகுப்பில் உபயோகிப்பதற்கு உடனடியாகப் 'பொம்மை தேவை' என என் பேர்த்தியாரிடம்(அம்மம்மாவிடம்) விண்ணப்பித்தாலும் அது உடனடியாகக் கிடைத்து விடப் போவதும் இல்லை. அம்மம்மா அடுத்த தடவை 'யாழ்ப்பாணம்' போகும்போது, அவர் மனம் வைத்தால் + ஞாபகம் வைத்திருந்தால் எனக்குப் பொம்மை வாங்கி வருவார். ஆனால் நாளைய தேவைக்கு என்ன செய்வது? என்பதுவே வழி நெடுக என் மனதின் கேள்வியாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டை நோக்கி டீச்சருடனேயே நடந்து வந்துகொண்டிருந்தேன். "டீச்சர் என்னிடம் பொம்மை இல்லை, நாளைக் காலையில் என்னால் பொம்மை கொண்டு வர முடியாது" என்று கூறினால் டீச்சர் என்னைக் 'கொன்று தின்றுவிடப் போவதில்லை' ஆனாலும் டீச்சரிடம் இதைக் கூற விடாமல் ஏதோ ஒன்று தடுத்தது. இந்த வயதில்தான், இந்த இடத்தில்தான் பிள்ளைகளின் தாழ்வு மனப்பான்மையும்(Inferiority Complex) தயக்க உணர்வுச் சிக்கலும்(hesitation) உருவாகின்றன என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவும்.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அம்மம்மாவிடம் டீச்சர் சொன்னதைக் கொஞ்சம் செய்தி நிறுவனங்களின் பாணியில் மிகைப்படுத்தி "நாளைக்கி பாப்பாப் பாட்டு பழகுவதற்கு பாவைப் பிள்ளை(பொம்மை) கொண்டு வர வேணுமாம், இல்லாட்டிக்கு பள்ளிக்குடத்துக்கு(பள்ளிக்கூடத்திற்கு என்பதை கிராமத்துப் பேச்சில் இவ்வாறு கூறுவோம்) வர வேணாம் எண்டு டீச்சர் சொன்னவா" என்றேன். இதைக் கேட்ட அம்மம்மாவிடமிருந்து எந்தவொரு பெரிய அதிர்வலைகளையும் காணோம். அவர் வெகு சாதாரணமாக "பூச்சா அல்லது சூட்டியிட்ட ஒரு பாவப்பிள்ளைய வங்கிக் கொண்டு போவன்" என்றார். இதைக் கேட்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை. இங்கு அம்மம்மா 'பூச்சா' 'சூட்டி' எனக் குறிப்பிட்டது எனது ஒன்றுவிட்ட தங்கைகள்(சித்தியின் பிள்ளைகள்). அவர்கள் என்னைவிட மூன்று, நான்கு வயது இளையவர்கள். அவர்களின் தந்தையார்(எனது சித்தப்பா) வியாபார நிமித்தம் அடிக்கடி இந்தியாவுக்கு சென்று வருபவர். அவர் இந்தியாவிலிருந்து வரும்போது தனது பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கி வருவார். இலங்கையோடு ஒப்பிடும்போது மேற்படி விளையாட்டுப் பொருட்கள் இந்தியாவில் மிக மலிவு என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அவர் ஒரு வித்தியாசமான மனிதன். பிள்ளைகளின் வீட்டுப் பெயரை சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என 'பூச்சா'(சிங்களத்தில் பூனை என்று அர்த்தமாம்) எனவும், 'சூட்டி' எனவும் 'சுசி' எனவும் வைத்தார். இதில் 'பூச்சா' மட்டும் வளர்ந்தபின் தனது வீட்டுப் பெயரை வெறுத்து 'விஜி' என மாற்றிக் கொண்டாள். பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் பெற்றோர்கள் அந்தப் பெயர் எதிர்காலத்தில் பிள்ளையால் விரும்பப் படுமா? என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
அம்மம்மா மேற்படி ஆலோசனையை முன் மொழிந்ததுதான் தாமதம் நான் எங்கள் சித்தியின் வீட்டை நோக்கிச் சிட்டாகப் பறந்தேன். சித்தியின் வீடு அம்மம்மாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. சித்தி வீட்டிற்குப் போவது என்பது எனக்கு 'தேனை விட' இனிமையான விடயம். காரணங்கள் பல. நான் எப்போது போனாலும் எனக்கு எங்கள் சித்தி ஒரு உணவோ, தின்பண்டமோ தந்து உபசரிப்பார். எங்கள் சித்திக்கு ஆண் பிள்ளைகள் இல்லை என்பதால், ஆண் பிள்ளைகள் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். அதுவும் தனது மூத்த சகோதரியின் மகன் என்றால் கேட்கவும் வேண்டுமா? என்மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். நாட்டை விட்டு 1990 இல் வெளியேறும் வரை அந்தச் சித்தியின் 'அன்பு மழையில்' நனைந்தேன் என்றால் மிகையில்லை. எனது மாமா, கடைசிச் சித்தி போன்றவர்கள் என்னை ஆயிரக் கணக்கான தடவைகள் 'டேய் தாசன்' என்று கூப்பிட்டு இருப்பார்கள். ஆனால் நான் குறிப்பிடும் அந்தச் சித்தியோ என்னை ஒரு தடவைகூட 'டேய்' என்று கூப்பிட்டிருக்க மாட்டார். எப்போதும் அன்பொழுக 'அப்பு' 'ராசா' என்றுதான் அழைப்பார். இதைவிடவும் எனது பேர்த்தி, பேரன், சித்தி, சித்தப்பா அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. அதாவது 'தாசன்' என்ற எனது பெயரை எப்போதும் 'ராசன்' என்றே பிழையாக உச்சரித்தனர். நான் வளர்ந்து வரும் காலத்திலும் அது தொடர்ந்தது. அது எனக்கும் பிடித்திருந்ததால் அதை ரசித்தேன். நான் வளர்ந்தபின் இதனை சித்தியும், சித்தப்பாவும் நிறுத்தி விட்டார்கள். ஆனால் எனது பேர்த்தியும், பேரனும் அதை விடவில்லை. எனது பேர்த்தியார் 1992 இல் இறக்கும் வரை என்னை 'ராசன்' என்றே அழைத்தார். ஒவ்வொரு பெற்றோருக்கும், பேரன் பேர்த்திகளுக்கும் தங்களது ஆண் வாரிசுகள் 'மகா ராசன்கள்'(ராஜாக்கள்) தானே? 'அல்லைப்பிட்டி' என்ற அந்தச் சிறிய கிராமத்தில் மட்டும் என்னை விடவும் முப்பது பேருக்கு மேல் வீட்டுப் பெயர் 'ராசன்' என்று இருந்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்கையில் வியப்பில் மூழ்கிப் போகிறேன்.
(இன்னும் சொல்வேன்)


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வெள்ளி, நவம்பர் 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும். (202)

பொருள்: தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீய செயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நாம் நட்சத்திரமாக ஆவதற்குச் சொந்த வெளிச்சம் தேவை. சொந்தப் பாதை தேவை. இருட்டைக் கண்டு அஞ்சுகிற ஒருவனால் 'நட்சத்திரமாக' மாற முடியாது. இருட்டைக் கண்டு பயப்படக் கூடாது. இருட்டில்தான் நட்சத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

வியாழன், நவம்பர் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு. (201)

பொருள்: தீய செயல்கள் தீமையை விளைவிக்கும். ஆகவே அவை தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அஞ்சப்பட வேண்டியவை. 

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம் பேர். ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.இவர்களில் எத்தனை பேரை நினைவில் வைத்துள்ளோம்? எத்தனை பேருக்கு நன்றி கூறியுள்ளோம்?எத்தனை பேருக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம்? 

தொலைத்தவை எத்தனையோ! - 2


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
நேரம் மாலை ஏழு மணியிருக்கும். இருட்டி விட்டது. அப்பா என்னைக் கூப்பிட்டு ”..அப்பப்பா வீட்டில் இன்றைய வீரகேசரியை எடுத்து வா!..வெளிச்சம் எடுத்துக் கொண்டு போ! (லன்ரன் அல்லது ரோச் லைட்)..”…என்பார். சாதாரணமாக ஒரு எழுபது மீட்டர் தூரமிருக்கும், கூப்பிடு தொலைவில் தான் ஆச்சி அப்பு வீடு உள்ளது.    ( ஆச்சி அப்பு )
இருட்டில் போவதென்றால் எனக்குப் பொல்லாத பயம். ஒளிக் கருவியை எடுத்துக் கொண்டு வீட்டுப் படிக்கட்டால் மண் நிலத்தில் கால் வைக்கும் போது..”தோடுடைய செவியன்..”….என்று தேவாரம் பாடத் தொடங்கி, அங்கு இங்கு  திரும்பிப் பார்க்காது, (அது தான் சுற்றி வர இருட்டே!) பாதையை மட்டும் பார்த்த படி, வேக வேகமாக நடந்து, (சில சமயம் ஓடுவதும் உண்டு,) அப்பு ஆச்சி வீட்டுப் படியேற..”பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவனன்றே..” என்று தேவாரம் முடியும்.
” என்ன பிள்ளை தனியாகவா வந்தாய்?..” என்பினம்.  ”..ஓ!… தேவாரம் பாடிய படி வந்தேன் ..” என்பேன். அப்பு சாய்மானக் கதிரையில் படுத்திருப்பார். தலைவாசல் மேசையில் விளக்கெரியும். ”..அப்பு பேப்பர் வாசித்து விட்டீர்களா?..”..என்பேன். பிறகு பத்திரிகையை ” அப்பாக்கு கொண்டு போகிறேன்…”…என்று கூறி எடுத்துச் செல்வேன்.
”…தனிய பயமில்லாமல் போவாயா?. நான் கூட்டிக் கொண்டு போய் விடட்டா..?”… என்பார் ஆச்சி. ”..இல்லையாச்சி!… நான் தனியப் போவேன்..” என்று கூறி..மறுபடி மண் நிலத்தில் கால் பதிக்கும் போது ஒரு தேவாரம், அது சொற்றுணை வேதியனாகவும் இருக்கும். வீடு போய்ச் சேர்ந்திடுவேன்…சில வேளை குடல் தெறிக்கும் ஓட்டம் தான்.
ஒரு நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியப்பாவின் வீடு. அவர்கள் பத்திரிகை வாங்கிப் படித்து விட்டு, அப்புவிற்குக் கொண்டு வந்து தருவார்கள். நாங்களும் அதைப் பகிர்வோம். (அப்பா,பெரியப்பா)
நான் இறுதிப் பக்க வலது மூலையில் வரும் சினிமாச் செய்தியைத் தவறாது வாசிப்பேன். அப்பா யாழ்பாணப் பட்டினத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தார். தினமனி, தமிழ்நாடு போன்ற பத்திரிகைகள் அப்பா கொண்டு வருவார். பெரிய கொட்டை எழுத்தில் உள்ள தலைப்புகள் பார்த்து, பிடித்தமானதை வாசிப்பேன். இந்தியப் பத்திரிகைகளாதலால் நிறைய சினிமா செய்திகள் அழகழகான படங்களுடன் வரும், ஆவலாகப் பார்ப்பேன்.
அப்போது தான் கல்கி வாசிக்கப் பழகினேன். பாப்பா மலர், வாண்டு மாமா சிறு கதைகள், அதற்கு வரும் படங்கள் என்று ரசிக்கத் தொடங்கினேன் .
ஓவியர் லதா, மணியன் கீறும் அழகிய படங்களை அப்படியே பார்த்துக் கீறத் தொடங்கினேன். மாமிமார் இருவர் நான் கீறுவதைப் பார்த்து வடிவாக இருக்கு என்பார்கள். எனக்கே எனக்காகப், படம் வரையும் வரைதல் கொப்பி வைத்து, கீறிய படங்களை அலுப்பு வரும் நேரங்களில் நானே பார்த்து ரசிப்பேன்.
பாடசாலையில் நிறப் பென்சில்கள், தண்ணிரில் கரைக்கும் நிறங்கள் என்று, வகுப்பு வளர்ச்சியின் படி வளர்ந்தது எனது இந்த ஆர்வம்.
எனக்கு நல்ல ஞாபகம் சக்கரவர்த்தித் திருமகள், அலையோசை, குறிஞ்சி மலர் கதைகள் வந்;தன. மாமிமார் அவைகளை வாசிக்க,  நான் பாப்பா மலர் வாசிக்க, வீரவிஜயன் சித்திரத் தொடர் பார்க்க என்று குறிப்பிட்ட நாளில் படலையடியில் அப்பாவிற்காக  காத்திருப்போம்.
அப்பா துவிச் சக்கர வண்டியில் பட்டினத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு வருவார். சொல்லப் போனால் மாமிமாருக்கும் எனக்கும் போட்டி தான். நான் முந்தினால் ” ஓ!…எடுத்திட்டாயா!..” என்று மாமி சிரிப்பார். நான் வாசிக்கும் வரை காத்திருந்து அவர்கள் புத்தகத்தை எடுத்துப் போவார்கள். அதே போன்று அவர்கள் முந்தினாலும் நான் பொறுமையுடன் காத்திருப்பேன். அப்பு ஆச்சி வீட்டில் அவர்கள் வசித்தனர்…(  மாமிமார் ) 
தனித் தனி வீடுகளில் வாழ்ந்தாலும் ஓரளவு கூட்டுக் குடும்பம் போன்ற வாழ்வில் பலவற்றை கண்ணுக்குத் தெரியாத மாதிரியே நாங்கள் பயின்றோம். இவைகளைத் தானே இன்றைய பிள்ளைகள் இங்கு தொலைத்து…..
அது ஒரு நிலாக் காலம்! 
அது ஒரு கனாக் காலம்!
புது தேன் சிந்திய காலம்!
தொடரும்.

புதன், நவம்பர் 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சொல்லுக சொல்லின் பயன்உடைய; சொல்லற்க 
சொல்லின் பயன்இலாச் சொல். (200) 

பொருள்: ஒருவன் தனக்கும் பிறர்க்கும் பயன் தரத்தக்க சொற்களையே பேச வேண்டும். பயன் தராத சொற்களைப் பேசுதலைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நமக்குக் கிடைக்கின்ற செல்வம் நாம் உயிர் வாழப் போதுமானது. அடுத்தவருக்குக் கொடுப்பதில்தான் நிஜமான வாழ்க்கை இருக்கிறது. அடுத்தவர்களை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எவ்வளவு உற்சாகம் பிறக்கிறது? இதிலிருந்து புரியவில்லையா? கொடுப்பதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று.


டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?


ஆக்கம்: செ.சஞ்சயன், நோர்வே.
சம்பவத்தின் பெயர்:
டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?

கதாநாயகன்:-
சர்மா சேர் என்று அழைக்கப்படும் ஈஸ்வரசர்மா சேர்.

வில்லன்கள்:-
7B அல்லது 8B படித்துக் கொண்டிருந்த நானும் எனது வகுப்பு அறிவுக் கொழுந்துகளும்.

இடம்:-
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி.

காலம்:-
1977 அல்லது 1978 இல் ஒரு நாள்.

நேரம்:-
மதியமிருக்கும்.

வெய்யிலில் நொண்டிப் பிடித்து விளையாடி பாடசாலை மணியடிக்க வகுப்புக்குள் வேர்த்து வழிந்தபடியே ஓடிவந்து உட்கார்ந்து நேர அட்டவணையைப் பார்த்து ஐயோ.. சமூகக்கல்வி ... கிழிஞ்சுதுடா டோய் சர்மாசேரின்ட பாடம்டா என்றார் எனது நண்பர் புரொபசர் அமீர் அலி
சர்மா சேர் ..இந்த பெயர் காணும் எனக்கு வயித்த கலக்க...(எனகக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் தான்)

வகுப்பின் மொனிட்டர் ”பொன்ஸ்” (பொன்னையா) யார் யார் கதைக்கிறார்கள் என்று சர்மாசேரிடம் போட்டுக் குடுக்க லிஸ்ட் எழுதிக் கொண்டிருந்தான்.எங்கட பெயர் தினமும் அவனின் லிஸ்டில் இருப்பதால் நாங்கள் (அமீர் அலி, ராஜேந்திரன், நான்) அவனைக் கண்டுகொள்வதில்லை.

எமக்கு முன்னுக்கு இருந்த வேணன் பொன்ஸ்ஐ 'டேய் கொன்னை (பொன்னையாவுக்குக் கொஞ்சம் கொன்னை இருந்தது) என்ட பெயர எழுதினியென்டால் கொல்லுவன்' என்று வெருட்டிக் கொண்டிருக்கும் போது வகுப்பு வாசலில் நின்றிருந்த உருவத்தைக் கண்டதும் அமைதியாயிற்று வகுப்பு.

Good Afternoon Sir! என்று எழுந்து நின்று ஒரு கோரஸ் ஆக நாங்க பாடி முடிக்க,

'சரி, சரி இருங்கோடா' என்றார் சர்மா சேர் வேர்வையின் எரிச்சலில்....

"பொன்ஸ்" இடமிருந்து லிஸ்டை வாங்கிப் பார்த்தவர்
வேற யார்ட பெயர் இதுல இருக்கும் என்ற படியே தலையாட்டிக் கொண்டு எம்மை எட்டிப் பார்த்தார். நாங்கள் ஏதும் நடவாதது போல முகத்தை வைத்துக் கொண்டிருக்க....
'கொஞ்சம் பொறுங்கோடா.. வந்து தாறன்' என்றார் சுத்த யாழ்ப்பாணத்து தமிழில்.

சரி, கொப்பிய எடுங்கோடா என்றவர் ஏதோ திடீர் என்று ஞாபகம் வந்தது போல வேண்டாம் வைய்யுங்கோ என்றார்.

சற்றே யோசித்தவர்..
டேய் கண்டிய எப்படா ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள் என்று சொல்லுங்கோ என்றார்.

மற்றய நேரங்களில் ”பீக்கு முந்திய குசு மாதிரி” சேர் கேள்வி கேக்க முதலே பதில் சொல்லும் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும்
அறிவாளிகள் கூட அமைதியாக இருந்தனர் அன்று.

நான் சொன்னது கேக்கேல்லியோடா என்றார் கொஞ்சம் கடுமை கலந்து வொலியூமைக் கூட்டி

கரண்ட் இல்லாத ஸ்பீக்கர் கடை ஸ்பீக்கர் போல சத்தமே வரவில்லை வகுப்பிலிருந்து...

கதிரையிலிருந்து எழும்பி மேசைக்கு முன்னால் வந்து நின்று இரு கை ஊன்றி,எம்பி மேசையில் ஏறி இருந்தார். கால்கள் மேசையின் கீழே ஆடிக் கொண்டிருந்தது.பிரம்பைத் தன் கையில் தட்டியபடி தலையையும் காலின் ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி ஆட்டியபடியே வகுப்பை ஒரு நோட்டம் விட்டார்.

இப்ப நான் உங்களுக்கு எங்கட வகுப்பை பற்றி கொஞ்சம் சொல்லணும்.
நாங்க கிட்டத்தட்ட 32 பேர், 4 வரிசைகள்.ஆகவே, ஒரு வரிசையில் 8 அறிவாளிகள்.

முன்வரிசையில் முன்னுக்கு இருந்தவர்களை பிரம்பால் காட்டிப் புருவத்தை மேலே உயர்த்தி நீ சொல் என்றார் வாய் திறக்காமலே.

வழமையாக சேர் இப்படித்தான் கேள்வி கேப்பார்.முன் வரிசயில இருக்கிற அறிவுக் கொழுந்துகள் பதில சொல்லி எங்களைக் காப்பாற்றுவார்கள்.

சேர் எங்களையும் இருந்திட்டு கேள்வி கேப்பார் ஆனால் பதில அவர் தான் சொல்லுவார். (எங்களுக்கு தெரியுமா என்ன?.. நாங்க படிக்கத்தானே வந்திருக்கிறம், சேருக்கு தானே இதுகள் தெரியும் என்கிற புரட்சியாளர்கள் நாங்கள்).இடைக்கிடை இல்ல, இல்ல அடிக்கடி அடிவிழும்..
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பது போல நாங்களும் அவரோட கோவிக்கிறதில்ல.. ஹி..ஹி

இந்த முறை சேர் கேட்ட கேள்வி முன்வரிசை அறிவாளிகளையும் ஆட்டிப் போட்டது என்றால் எங்கட நிலமயச் சொல்லவா வேணும்?

புரொபசர்அமீர் அலி மேசைக்கு கீழ தன்னட கொப்பியப் புரட்டிக் கொண்டிருந்தார்... அவனப் பார்க்க எனக்குப் பாவமாயிருந்தது.
ஏனென்றால் எனக்குத் தெரியும் அந்த கொப்பில அவன் என்ன எழுதுறவன் எண்டு. எம்.ஜி. ஆர் வாழ்க.. சிவாஜி ஒழிக எதாவது ஒரு சினிமாபாட்டு (அன்பு மலர்களே! .. நாளை நமதே படப் பாட்டு)
மற்றும் பாத்திமா.இதைவிட அரபில ஏதோ எழுதியிருப்பான்.
அது பாத்திமா ஐ லவ் யூ என்பதாகத் தான் இருக்கும்.
அது அவன் பில்ட் அப் குடுக்கிறத்துக்காக வைத்திருக்கிற கொப்பி
அதுல எங்க கண்டியப் பற்றி இருககப் போகுது.

சர்மாசேரின் பயத்தில் பொடியனுக்கு தான் என்ன எழுதினது என்டே
தெரியாமல் போனதில ஆச்சரியமொன்டும் இல்ல அதுக்கிடையில சர்மா சேர் நீங்க சொல்லுங்கோ, நீங்க சொல்லுங்கோ என்று குசும்பும், நக்கலும் கலந்து பூனை தன்னிடம் அகப்பட்ட எலியின் உயிருடன் விளையாடுவது போலக் கேட்டுக் கொண்டிருந்தார் முன்வரிசை முழுவதையும்.
இண்டைக்கு நாங்க சாத்திரம் கேட்டிருந்தால் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் ஏழரைச்சனி உச்சத்தில எண்டும், இண்டைக்கு பள்ளிக்கு போகாத மனே எண்டும் சொல்லியிருப்பான்.. சாத்திரி

'அப்ப உங்களுக்கு உந்த கேள்விக்கு பதில் தெரியாது' என்றார் மீன்டும் சுத்த யாழ்ப்பாணத் தமிழில். சாதாரண நேரமாயிருந்தால் அமீர் அலி
உந்த, குந்த என்று யாழ்ப்பாணக் கதையை நக்கல் பண்ணியிப்பான்,
ஆனால் இன்றிருந்த நிலையில் அவனுக்கு நக்கலடிப்பதைப் பற்றி யோசிக்கவே நேரமிருக்கவில்லை.

கேள்வி என்னிடம் வரமுதல் இன்னும் 22 பேர் இருந்தது எனக்கு ஒரு வித மோரல் சப்போட் (moral support) ஆக இருந்தாலும் மனதுக்குள் ஒரு சின்னப்பயம் இருந்தது.ஆனால் கிறிக்கட் இல் பட்டிங் பண்ணுறவங்கள் அவுட் ஆகினால் எப்படியிருக்குமொ அப்படியிருந்தது வகுப்பின் நிலை.
பதில் சொல்லக் கூடயவர்கள் அவுட்டாகி விட்டார்கள்;இனி இருப்பதை நம்பிப் பயனில்லை என்ற நிலை.

இந்தாளிட்ட இண்டைக்கு மாட்டுப்பட்டா..
இண்டைக்கு கதைத்ததுக்கும் நேற்று வீட்டு வேலை செய்யாததுக்கும்
இண்டைக்கு பதில் சொல்லாததுக்கும் சேர்த்து தோலை உரித்துப் போடுமே என்று மனம் கணக்குப் போட்டது. தப்ப வழிதேடிக் கொண்டிருந்தேன்.

திடீர் என்று மூன்றாம் வரிசை வேணன் சேர் என்றான்.
மெதுவாய் திரும்பி என்ன என்பதை வாய் திறக்காமல் கண்ணால் கேட்டார். (மனிசனிட்ட ஒருவிதமான ஸ்டைலும் இருந்தது அப்ப. 1977, 1978 இல் அவர் புது மாப்பிள்ளையும் கூட)
ஒண்டுக்கு போக வேணும் என்றான். ஆகா.. எப்படியெல்லாம் போசிக்கிறாங்கள் என்று நான் யோசிச்சுக் கொண்டிருக்கேக்க

'ஓ அப்பிடியே...
அடக்கேலாம இருக்குமே' என்கிறார் சர்மா சேர் (ஓம் எண்டு தலைய ஆட்டுறான் வேணன்).

'பறவாயில்ல உதிலயே போ' என்றார் சர்மாசேர்.எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.வேணனிடம் 'டேய் எங்களாலேயே இந்த மனிசன ஏமாத்தேலாம இருக்கு நீ ஏன்டா வாயத்திறக்கிறாய்' என்று சொல்ல ஆசைப்பட்டாலும்.. அடக்கிக் கொண்டேன் இப்ப இரண்டாவது வரிசையையும் எழுப்பி விட்டிருந்தார் சர்மா சேர்.

அன்பு ஒழுக, 'பொன்னையா இங்க வாங்கோ' என்றார்.கிட்ட போன பொன்னையாவைப் பார்த்துச் சொன்னார் போய் 3 நல்ல பிரம்பு எடுத்திட்டு வா என்று. வழமையாய் இப்படியான வேலைக்கு குதித்துக் கொண்டு ஒடுற ஆள் அவன்.ஆனால் இன்று மட்டும் விருப்பமி்ல்லாமல் நடந்து போனான்.(அவர் ஏற்கனவே எழும்பி நிற்கும் அறிவாளிகளில் ஒருவர்)

டேய்! எத்தின தரமடா உங்களுக்கு சொல்லுறது படிக்க ஏலாட்டி
மாடுமேக்க போங்கோடா எண்டு என்றார்.(வீட்ட விடுறாங்க இல்ல சேர் என்று சொல்ல யோசித்தேன் என்றாலும் இதையும் அடக்கிக் கொண்டேன்).அடுத்து மூன்றாவது வரிசையையும் கேட்டுப் பார்த்தார்.
அதில ஒருத்தன் சேர் 1935 என்றான் (எனக்கே அது பிழை என்டு தெரியும்). டேய் உன்ட கொப்பர் பிறந்த ஆண்டையே கேட்டனான் என்றார் மகா எரிச்சலுடன். (குசும்பும், நக்கலும் அவருக்கு கைவந்த கலை)

‌பிரம்பெடுக்க போன பொன்னையா ஒண்டுக்கும் உதவாத 3 பிரம்புகளைக் கொண்டுவர, 'டேய் பொன்னய்யா இங்க வா' என்றார்..கொன்னையும், பயமும் ஒன்றாய் சேர, 10 தரம் சே.. சே.. சே.. போட்டுக் கடைசியாய் ”ர்” போட்டான்.அதுவரைப் பொறுமையாய் இருந்த சர்மாசேர், 'டேய் நீ என்ன எமாத்ததேலாது... கையை நீட்டு' என்றார் அவனைப் பார்த்து.அவன் கொண்டு வந்த பிரம்பால அவனுக்கே 2-3 போட்டு, 'போய் கெதியா நல்ல பிரம்பாக் கொண்டு வா இல்லாட்டித் தெரியும் தானே' என்றார்.வளமையா பெரிய எடுப்பு எடுக்கிற பொன்னையா
கையை உதறி உதறிப் போவதைப் பார்த்த போது சந்தோசமாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து மோசஸ் டீச்சர் வந்து ஏதோ சேரிடம் கேக்க
சேர் அவவுடன் கதைத்துக் கொண்டிருந்தார்.

‌இது தான் சமயம் என்று சில அறிவுக் கொழுந்துகள்
டிஸ்கஷன் நடத்திச்சுதுகள்.டேய் 1700 டா என்றான் ஒருவன்.இல்லடா 1800க்கு பிறகு என்றான் மற்றவன். இல்ல 1600 ஆ இருக்குமோ என்று முதலாமவன் சொல்ல,அது ஒல்லாந்தர்டா என்றான் இன்னொருவன்.
டேய் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் ஒண்டுடா மடையா
என்றான் ‌வேணண். (சேர் அதைக் கேட்டிருந்தால் கொலையே செய்திருப்பார் அவனை).

டீச்சர் வந்த வேலை முடிந்து போனதும், டேய் நான் டீச்சருடன் கதைக்கேக்க உதுக்குள்ள கதைத்தவங்கலெல்லாம் முன்னுக்கு வாரீங்களோடா என்றார்
மிகுந்த மரியாதையுடன்.பலியிடப் போகும் ஆட்டுக்கு மரியாதை செய்வது போல இருந்தது அது.

ஓருவரும் போகவில்லை

டேய்! பேர் சொல்லி கூப்பிடடோனுமோடா உங்கள? கெதில முன்னுக்கு வாங்கோ என்றார்.3 பலியாடுகள் முன்னுக்கு போயின.வேடா நீயும் வா என்றார்.(வேணனின் பட்டப்பெயர் வேடன்) பயல் ஆடிப்பொயிட்டான்.
பெயர் சொன்னாப் பிறகு நிக்கிறது தற்கொலைக்கு சமம் என்பது ‌வேணணுக்கு தெரிந்ததால் அவனும் முன்னுக்குப் போனான்.'முழங்கால்ல இருங்கோடா' என்று கட்டளை வந்தது.சமூகக்கல்விச் சக்கரவர்த்தியிடம்
மண்டியிட்டார்கள் நால்வரும்.

இந்த நேரம பார்த்து பிரம்பு தேடப் போன பொன்னையா
3 நீண்ட பச்சைப் பிரம்புகளை கொண்டு வந்து மேசையில் வைத்தான்.
பிரம்புகளை ஒரு தரம் குவாலிடி செக் பண்ணி காற்றில் விசிறிப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டார்.திடீர் என மூன்று பிரம்பையும் ஒன்றாக பிடித்து வேணணின் இடுப்புக்குக் ‌கீழே ஆனால் பின்னந் துடைக்கு மேலே உள்ள சதைப்பிடிப்பான பகுதியை நோக்கி அவர்
பிரம்பை இறக்கவும் வேணண் 'சேர் சேர் நோகுது நோகுது' என்று
எழும்பி நின்று கத்தவும் சரியாய் இருந்தது. 'டேய் உன்னை எழும்பச் சொன்ன நானே' என்று கேட்டு அவனை மீண்டும் மண்டியிட வைத்தார்.

அடுத்தது எங்கட வரி மட்டும் தான் பாக்கியிருந்தது.
கிட்ட வந்து 'அட... நீஙகள் மும் மூர்த்திகள் மூன்று பேருமோ மிச்சமிருக்கிறீங்கள்'
என்றார் குரலில் 110 வீதம் நக்கல் கலந்து. 'உன்ட கொப்பர் போலீஸ்;அம்மா ஒரு டொக்டர்;மகன் கடைசிவரிசையில குந்தியிருக்கிறார்' என்றார் என்னைப் பார்த்து.எனக்குத் தொண்டையும் பிறகு நாக்கும் வறண்டது.காதுக்குள் எதோ செய்தது.கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.நான் தற்கொலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன்.என் இதயம் வெளியில் வந்து விழவா என கேட்டுக் கொண்டிருந்தது.

அமைதியாய் நின்றிருந்தேன்.

உனக்கு வெக்கமில்லையே என்றார் (அப்படி என்றால் என்ன சேர்?)

நான் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தேன்.

புரொபசர் அமீர் அலியிடம் போனார்.

ஆட... நீங்களோ என்றார் அமீர் அலியைப் பார்த்து. பயங்கர நக்கலாய்
திரும்பிப் பார்த்தேன் எங்களின் ”தலைவர்” . தலைகுனிந்து நின்றிருந்தார்
டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்? என்றார் அவனிடம்.

இப்படிப்பட்ட கேள்வியை அவனிட்ட கேக்காம
எந்த தியட்டரில என்ன படம் எத்தன மணிக்கு எப்ப ஓடுது எண்டு கேட்டிருந்தால் வீரகேசரி பேப்பரில இருக்கிற கடைசிக்கு முன் பக்கம் பாக்காமலே சொல்லக் கூடிய டலன்ட் அவனிட்ட இருந்தது.
வாழைச்சேனை, ஏறாவூர்,மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வரை இருந்த
எல்லா தியட்டர்களும் அத்துப்படி அவனுக்கு..அவனிட்ட இருக்கிற அறிவுக்கு ஏற்ற மாதிரி கேள்வி கேக்காதது சர்மா சேரின் பிழையா அல்லது அவனின தூரதிஸ்டமா என்பது தெரியவில்லை அன்று நெருப்படி வாங்கினான்.

அடுத்தது ராஜேந்திரன். அட சோழச் சக்கரவர்த்தி.. நீங்களாவது சொல்லுங்கோ என்றார் அவனைப் பார்த்து.(அவனுக்கு ஒரு சக்கரவர்த்தியின் பெயரை வைக்காமலே இருந்திருக்கலாம் அவனின் அப்பா) .அவன் குனிந்த தலை நிமிரவில்லை.

இப்ப முழு வகுப்பும் எழும்பி நிற்கிறது..

சோரின் வெள்ளை நிற முகம் சிவந்திருக்கிறது. ஏமாற்றம் தந்த கோவத்தினால். தான் கற்பித்ததை ஒருவரும் ஞாபகம் வைத்திருக்கவில்லை என்பதும்; தான் கஸ்டப்பட்டுக் கற்றுக் கொடுத்ததை நாங்கள் கற்காமல் உதாசீனப்படுத்தி விட்டோம் என்பதும் அவரை அதிகமாக பாதித்திருந்தது என நினைக்கிறேன்..
அந்த ஏமாற்றம்.. கடுங் கோபம் கொள்ளச்செய்தது அவரை .
மனிதம் நிரம்பிய எந்தவொரு ஆசிரியருக்கும் வரவேண்டிய நியாயமான கோபம் தான் அது. (அது அன்று புரியவில்லை, இன்று நன்கு புரிகிறது)

தனது ஏமாற்றத்தையும், துக்கத்தையும் கலந்து கோபம் கனக்க சேர்த்து அடி இடி என அடித்தார். அன்று கிடைத்த அடி வாழ்க்கை முழுக்க மறக்காது.

பாவம் பெடியள்! மோட்டுத்தனமாக அடித்துப் போட்டேன் என்று சுயர்விமர்சனம் செய்து கொண்டாரோ என்னவோ தெரியாது.
அது தான் சர்மா சேர் கடைசியாகப் பயங்கரமா அடித்தது.
அதன் பின்பும் அடித்திருக்கிறார் ஆனால் அவை .. அந்த ஒரு நாளைப் போல பயங்கரமானவை அல்ல.

சர்மாசேர் பற்றிய சில குறிப்புகள்:

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பேரன்பு மிக்க ஆசான்களில் முக்கியமானவர். 1977 அல்லது 1978 தொடக்கம் 2006- 2007 வரை மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்காக தன்னையே தந்த ஆசான்.
பிரபல கிறீஸ்தவ பாடசாலை எனினும் சைவசமய நிகழ்வுகள் அதிகளவில் மிகச் சிறப்பாக நடைபெற இவரே காரணம். சரஸ்வதிப் பூசை என்றால் அவர் தான் கிங்.வேட்டியுடன் உலா வருவார். இரவிரவாக திட்டமிட்டு, கட்டளையிட்டு அடுத்த நாள் எல்லாம் முடியும் வரை ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பார். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு புக்கை கிண்டவும் செய்வார். சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா என்ற பாட்டு சேருக்கு நல்ல விருப்பம்.

எங்கள் இல்லத்தின் தலைமை ஆசிரியரும் அவர் தான்.. 'கிட்ட வந்து ரகசியமாய் டேய் தோக்கப்படாதுடா என்ன..' என்பார் அடிக்கடி.

இவரின் அடிக்குப் பயந்து நான் மட்டக்களப்பு 'ஆனைப்பந்திக் கோயில் பிள்ளையாரப்பா இந்த மனிசனை மட்டும் வேற பள்ளிக்கூடம் மாத்து' என்று 25 சதத்துக்கு நேத்தி வைத்திருந்தேன். அதை விட ஒவ்வொரு வெள்ளியும் 5 சதம் உண்டியலில போட்டன். ஆனப்பந்திப் பிள்ளையார் உதவி செய்யவே இல்லை. (அதுவும் நல்லதுக்குத் தான்)

ஒரு நாள் நவனீதனை வெருட்டி (அவனின் அப்பா புண்ணியமூர்த்தி சேர் தான் பள்ளிக்கூடத்துக்கு டைம்டேபிள் போடுவார்) சர்மா சேரை மாத்தப் பார்த்தோம் நாம் மூவரும். அடுத்த நாள் புண்ணியமூர்த்தி சேர் தனிய கூப்பிட்டு காத திருகி அனுப்பினார்.... (பிறகு நவனீதனுக்கு அடி போட்டது வேற கதை)

32 ஆண்டுகளின் பின்னான ஒரு நாளில் Facebook இல் உலா வந்துகொண்டிருந்த போது கண்ணில் பட்டது "Students of Sarma Sir" என்னும் பக்கம்..அதுவும் கனடாவிலிருந்து.
ஒரு நப்பாசையில் சும்மா புகுந்து பார்த்தால்... அட நம்மட சர்மா சேர். குடும்பத்தில் இருந்து பிரிந்த உறவொன்றை நீண்ட காலத்தின் பின் மீண்டும் கண்டு கொண்டது போலிருந்தது எனக்கு. தினம் தினம் பல மாணவர்கள் வந்து வாழ்த்திவிட்டு செல்கிறார்கள் அவரை. பொறாமையாய் இருக்கிறது அவரைப் பார்க்கும் போது...நான் ஆசிரியனாக வராததையிட்டு மனம் வருந்துகிறேன்.

சேர் சுகமாயிருக்கிறீங்களா? என்னை தெரிகிறதா, நான தான் அவன், நான் தான் இவன், இப்படி எத்‌தனை
எத்தனை மரியாதைகள், கேள்விகள், என்ன அன்பு, என்ன வாஞ்சை. ஆண்டுகள் கடந்த பின்பும் சேர், சேர் உருகி மீண்டும் குழந்தையாய் மாறி நிற்கும் அவரின் மாணவர்கள்.. குடுத்து வைத்த மனிதன் சேர் நீங்கள். இதை விட வேறென்ன வேனும் ஒரு மனிதனுக்கு...

நான் திருத்திர கொம்பியூட்டர்கள் நான் பென்சன் எடுத்தாப் பிறகு இப்படி மரியாதை செய்யுமா எனக்கு? ஏன்டா நாயே என்று கூட சொல்லாதுகள் அதுகள்.

சேர் விசில் அடித்தால் உலகம் முழுவதிலிருந்தும் ”சர்மா சேர் படையணி” ஒரு நிமிசத்தில் தயாராக நிற்குதே.
ஒபாமாவுக்கு கூட பென்சன் எடுத்தாப் பிறகு இப்படி மரியாதை இருக்காது.

சேர்....யு ஆர் ரியலி கிரேட்!

இறுதியாக....... கட்டாயம் நான் இதை சொல்லியே ஆக வேண்டும்...

கடைசிவரிசை 3 குரங்குகளில்

அமீர் அலி கொழுப்பில் கடை வைத்திருப்பதாக அறிந்தேன் -- (இப்பவும் படம் பார்ப்பதை நிறுத்தவி்ல்லையாம்) பாத்திமாவுக்கு எங்கிருந்தாலும் வாழ்க என்று 10ம் வகுப்பில் பாட்டு படித்திட்டான்..

சோழச்சக்கரவர்த்தி, ஞானம் மாஸ்டர் என்ற பெயரில் கிழக்கிலங்கை இஸ்லாமிய சமூகத்தவரிடையே மிகவும் அதிகமாய் நேசிக்கப்படும் ஒரு மனிதனாயும், புலம் பெயர்ந்த சமூகத்தில் கிழக்கு மாகாணத்ததிற்காக குரல் கொடுப்பவனாயும் வாழ்ந்து வருகிறான்.... புத்திஜீவி என்கிறார்கள் அவனை.

ஹி ..ஹி என்னைப் பற்றி என்னத்த சொல்ல...
வின்சன்ட ல ஒருத்திய சுத்தி
(அப்பா! என்னத்த எழுதிக் கிழிக்கிறியள்? கோழிய வெட்டித்தந்திட்டு போயிருந்து எழுதுங்கோ எண்டு கத்துறாள்...)
புலம் பெயர்ந்து..
கலியாணம் கட்டி.
2 குட்டி போட்டு
மொட்டை விழுந்து,
வண்டி வைத்து,....
சில பல வியாதிகளுடன்
கணணித்துறை முகாமையாளனாக
பழைய நினைவுகளை
அசை போட்டபடி
இடைக்கிடை
இப்படி
ஏதாவது எழுதிய படி
காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

சேர்! உங்கள் கேள்வியின் பதில் 1815.
என்ன... சரி தானே?
கொஞ்சம் லேட்டாக .....கனக்க இல்ல ....32 வருடங்கள் கழித்து பதில் சொன்னதற்கு மன்னிக்கவும்...

சேர்! நீங்கள் சொல்வது போல் அடியாத மாடு படியாது.

அன்புடன்
உங்களின் அடியால் படிந்த 3 மாடுகளில் ஒன்றான
சஞ்சயன். செ

ஆயிலும் கடைசியாய் ஒரு கேள்வி: ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் சென்று க‌டமையாற்ற நினைக்கவில்லை?
பதில் எனக்குத் தெரியும் சேர்... எங்கள் அன்பான மண்ணுக்கு நீங்கள் பெருந்தன்மையாய் தந்த பரிசு அது. .இதைத்தான் சிலர் புரியாமல் ”மருந்து போட்டுட்டாங்கள்”, ”பாய் போட்டுட்டாங்கள்” என்கிறார்கள்.

வாழ்க மட்டக்களப்பு மெதடித்த மத்திய கல்லூரியும் எங்கட சர்மா சேரும். எங்கட வகுப்பும்