ஞாயிறு, அக்டோபர் 17, 2010

முதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 5 -

நீரின்றி அமையாது உலகு

இன்னும் இருபது வருடங்களில் இவ்வுலகிலுள்ள மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தினால் படப்போகும் துன்பத்தைப் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். ஆனால் இவ்வுலக மக்களில் பெரும்பான்மையானோர் இதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப் படாதது ஏன் என்ற கேள்விக்கு விடை என்னவாக இருக்கும்? அதற்கு விடை ஒன்றே ஒன்றுதான் அதாவது, இன்றைய உலக வாழ்க்கையானது பரபரப்பு நிறைந்தது, மக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள், எதைநோக்கி? ஆடம்பரங்களையும், சொகுசு வாழ்க்கையையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு, அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பூமியைப் பாடாய்ப் படுத்தப் போகும் 'தண்ணீர்ப் பஞ்சத்தைப்பற்றிக்' கவலையில்லை, அவர்களுடைய கவலையெல்லாம் 'இன்னும் ஐம்பது வருடங்களில் இவ்வுலகை ஆட்டிப்படைக்கப் போகும்' பெட்ரோலியத் தட்டுப்பாட்டிற்கு என்ன தீர்வு? என்பதுதான். வேடிக்கையாகத் தெரியவில்லையா? உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமான தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாத இந்த உலகம், ஆடம்பரப் பொருளாகிய வாகனங்களுக்குப், பெட்ரோல் இல்லாமல் போய்விடப் போகிறதே என்று கவலைகொள்கிறது. பெற்றோலியத்திற்கு மாற்றீடாக, இயற்கை எண்ணைகள், தானிய எண்ணைகள், காய்கறி எண்ணைகள் போன்றவற்றை உபயோகிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சியில் அறிவியல் துறையினர் அல்லும்,பகலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தண்ணீர் சம்பந்தமாக ஆராய்ச்சிகளோ, பயனுள்ள திட்டங்களோ தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பாலான நாடுகளில் மக்கள் தண்ணீர்ப்பஞ்சம் இவ்வுலகைப் பயமுறுத்துவதைப் பற்றிக் கவலைகொள்ளாது இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:


  1. அறியாமை அல்லது போதிய உலக அறிவின்மை.
  2. தமது குடிநீர்க் கிணறுகளில் அல்லது நீர்நிலைகளில் இருந்து கிடைக்கும் நீரானது இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு அப்படியே கிடைக்கும் என்று நம்புவது.
  3. தண்ணீர், தமது நாட்டில் மிகவும் மலிவாகக் கிடைப்பதால் / இலவசமாகக் கிடைப்பதால்  அது ஒரு அருமைத் தன்மையற்ற (இயற்கையாகக் கிடைக்கின்ற) வளம் என்ற நம்பிக்கை.
  4. உலகின் ஏனைய பகுதி மக்களை வாட்டுகின்ற பிரச்சனை, தமக்கு ஏற்படாதவரை அது தமது பிரச்சனை அல்ல என்று எண்ணுகின்ற 'சுயநலப் போக்கு'


இன்னும் காரணங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

இம்மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை, உலகின் தண்ணீர்த் தேவையில் 26% த்தை நிறைவு செய்கின்ற உலகின் 173 முக்கிய நதிகளில் பிரதானமானவையாகக் கருதப்படும், நைல்நதி, அமேசான் நதி, சிந்துநதி, கங்கைநதி, யாங்சிநதி, மஞ்சள்நதி போன்றவை முன்னெப்போதும் இல்லாதவாறு மாசடைந்து விட்டன. இந்நதிகளை குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு நதிகள் மாசடைவதற்குக் காரணமான விடயங்களைத் தவிர்ப்பதற்கோ, தடுப்பதற்கோ முன்வராத அரசுகள், பரஸ்பரம் அண்டை நாடுகளையும், பெரிய தொழிற்சாலைகளையும் குற்றம் சாட்டித் தப்பித்துக் கொள்கின்றன. ஆனால் பாதிக்கப் படுவது, பாதிக்கப் படப்போவது சாதாரண அடித்தட்டு மக்களே.
இவ்விடத்தில் உங்களுக்கு முக்கியமான ஒரு விடயத்தைக் கூறியே ஆகவேண்டும், உலகில் ஒரு மிகச்சிறிய நாட்டில் சுமார் 50 லட்சம் மக்கள், அவர்களது நாட்டில் நிலத்திற்கடியில் ஒரு சொட்டுக் குடிநீர் கூட இல்லாத சூழலில், தமது திறமைகளைப் பலவழிகளிலும் பயன்படுத்தித் தண்ணீரைப் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர். அந்நாடு எது? என்று சற்றுச் சிந்தியுங்கள்.
(அடுத்த வாரமும் தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக